சூரியாள்

Thursday, July 11, 2013
கற்பனை வாழ்வு

கற்பனை வாழ்வு

மூடிக் கிடந்த அறை
வெளியில்
விழித்திருந்த   விழிகளுக்கிடையில்
ஆடிக் கொண்டிருந்தன கற்பனைகள்

 உள்ளே இருப்பது எது என்பது
அவரவர் கற்பனையாயிற்று

ஒரே உறக்கம்
பெண் என்கின்ற புனைவில்
 சோம்பேறித் தூக்கமாயிற்று
ஆண் எனில்
களைப்புக்கான ஓய்வுக்கானதாயிற்று

குழந்தை என்பதில் விளையாட்டாயிற்று
 ஆணும் ஆணும் என்பதான புனைவில்
சண்டையும் குருதியுமாயிற்று
பெண்ணும் பெண்ணும் எனில்
உலர்ந்த உருப்படிகள் மடித்துக் கொண்டன
ஆணும் பெண்ணும் என்பதில்
கிசுகிசுக்களும்
கலவி குறித்தான  கற்பனைகளும் உலாவர

அறை வெற்றிடமாய் கிடந்தது
ஓடிய விசிறிகள்
புழுங்கிய தரையை விசிறிக் கொண்டிருந்தன
தலைகீழாய் கற்பனைகள் மாறுமட்டும்
நிஜங்களால் நிரம்ப மறுக்கின்றது

வாழ்வின் அறைகள்
posted by mathibama.blogspot.com @ 7/11/2013 11:51:00 pm   0 comments
Wednesday, July 10, 2013
தனிமை மூடை -கவிதை
தனிமை மூடை

கருவறை இருளிலிருந்து
என்னோடவே இருந்து வருகிறது
தனிமை என்றொரு மூடை

என் கைவலியை கண்டொருவன்
உள்ளிருப்பது பொக்கிசங்களென
புரளி கிளப்பிப் போகின்றான்.
நான் அசந்த வேளையில்
அது அவனால் காணாமல் போகக் கூடும்

தளர்ந்து விட்ட பொழுதினில்
 இறக்க முடியா பாவ மூட்டையென
இரக்கமோடு வாசித்து விடுவோருமுண்டு

மூடிய துணிகளுக்கப்பாலிருக்கும்
இரகசியங்களை
திறக்கும் சுவாரசியமுடையோரும் உண்டு

அதற்குள் சின்ன விதை தூக்கி பறக்கும்
பட்டுச் சிறகுகளும் உண்டு
தேய்ந்து உருண்டுவழவழப் பாகிப் போன
கற்களும் உண்டு

கால துயில் களைதலில்
பெருமானங்கள் மாறிப் போக
விலைமதிப்பற்றதாகலாம்
அதுள்ளிருந்தவைகள் எதுவும் ஒருநாள்

எனது தோள்களோ
சுமையில்லாது நடக்கப் பழகாததாலேயே
ஏந்தியபடி நடக்கிறது
நைந்து கிழியும் வெளித் தோற்றத்தை
அவ்வப் போது மாற்றிய படிக்கு

உள்ளிருக்கும் தனிமை தொலையாது

காலடியில் பின்னோக்கியபடியே
மண் மறைகிறது

பிதுங்கி வழியும் கூட்டத்தில்
எனக்கான வழியாய்

மாறிப் போகிறந்த மூடை
posted by mathibama.blogspot.com @ 7/10/2013 01:20:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates