ஜீ டிவி
காலை 11 மணி அளவில் காரில் சென்னையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். தொலைபேசி அழைப்பில் ஜீ டிவியிலிருந்து பேசுவதாக விவேக் என்பவர் பேசினார். talk show ஒன்று Zee tamil Tvயில் நடைபெறப் போவதாகவும் அதற்கு வரமுடியுமா என்றும் கேட்டார்.
எனது தொலைபேசி எண் அவருக்கு பிரபலங்களின் முகவரிகளில் இருந்து கிடைத்ததாகவும், அதில் இருந்த மருத்துவ முகவரியைக் கொண்டு மருத்துவமனைகள் குறித்த உரையாடலில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார் தொடர்ந்த அவரது உரையாடலில் என்னைப் பற்றிய அறிமுகம் இல்லை என்பது தெரிந்தது.நான் யார் என அறிமுகம் செய்து கொண்ட பிறகு பெண்களுக்கெதிரான
வன்முறைகள் குறித்து பேச முடியுமா என்றும் கேட்டார்
அந்த talk show வில் என் பங்கு என்ன என்று கேட்ட போது முக்கிய விருந்தினராக பேச அழைக்கின்றோம் என்றார். ஒரு அரைமணி நேரம் கழித்து என்னுடைய அடுத்தடுத்த நிகழ்வுகளை திட்டமிட்டுவிட்டு சொல்லுகின்றேன் என்று சொல்லிவிட்டு என்னுடைய அந்த வார பயணத்திட்டத்தை ஒழுங்கு பண்ணி அடுத்தடுத்த நிகழ்ச்சி இருப்பதால் விமானத்தில் சென்று விட்டு திரும்ப திட்டமிட்டேன். மீண்டும் ஒரு முறை முக்கிய விருந்தினராக இருப்பதற்காகத் தான் அழைத்திருக்கின்றார்களா என்று உறுதி செய்து கொண்டேன்.கூட்ட்த்தோடு அமர்ந்து பேசுவதற்காக
இவ்வலவு செலவு செய்து பயணப் பட வேண்டியதில்லையே. நண்பர்களிடம் talk show குறித்து பேசிய போது மீண்டும் மீண்டும் பலரும் அது கதைக்காகாது. நேரத்திற்கு முடிக்கமாட்டார்கள் என்று சொன்னார்கள்
திரும்பவும் தொலைபேசினேன். கண்டிப்பாக 5 மணி சுமாருக்கு முடித்து விடுவோம் என்றார்கள். இவர்களை நம்பி return ticket bus இல் 7.30 மணிக்கு பதிவு செய்து விட்டேன். மறுநாள் பாத்திமா கல்லூரியில் ஏற்கனவே ஒத்துக் கொண்ட நிகழ்வு ஒன்று இருந்தது.
அதனாலேயே விமானத்தில் சென்னை போய் இரவே பேருந்தில் திரும்ப திட்டமிட்டிருந்தேன். 2 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி அதிகபட்சம் 5 மணிக்கு முடிந்து விடும் என உறுதி தந்தார்கள்.
அடுத்த என் பயணத்தை உறுதி செய்ய போன் அவர்கள் செய்த போது நீங்க முக்கிய விருந்தினர் தான் ஆனா தனியா எங்க
show வில் நாங்க உக்கார வைக்கிறதில்லை உங்க பேர் எல்லாம் name card போட்டு
highlight பண்ணுவோம் என்றார்கள்.
தயக்கம் தொடர்ந்தாலும், போட்டு விட்ட ticket cancel பண்ண முடியாத நெருக்கடியில் பயணத்தைத் தொடர்ந்தேன்.
2 மணிக்கு AVM studio வாசலில் வந்து சேர்ந்தேன். நில் கவனி சொல் டீம் இரு பெண்கள் இரு ஆண்கள் பேசுவதற்காக வந்தவர்களை வரவேற்று சாப்பிடச் சொல்லி போதும் போதும் எனக் கவனித்தனர். வந்திருந்தவர்களை
சாப்பிடச் சொல்லி விருந்துபச்சாரம் செய்வதிலும், மாற்றுத் திறனாளிகளை கவனித்துக் கொள்வதிலும்
பெரும் சிரமம் எடுத்துக் கொண்டனர்
பழைய குடோன் போலிருந்த அந்த தகர செட்டின் முன்னால் “நாம்” அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலரும், இரண்டு மாற்றுத்திறனாளிகளும், இளம் வக்கீல்கள், கல்லூரி பெண்கள் சிலரும் வந்திருந்தனர். பெண்களுக்கெதிரான வன்முறை குறித்து புதிய தளத்திலிருந்து பேச வந்திருக்கின்ற பெண்களுடன் பேச எடுத்துக் கொண்ட சுவாரசியம் நேரம் போனதை மறக்கடித்தது.
2 மணிக்கு தொடங்க இருந்த நிகழ்ச்சிக்கு 4 மணிக்கு அரங்கத்தினுள் அழைத்தார்கள். அனைவரையும் உட்காரவைத்து அவர்களே வந்து நிகழ்ச்சி தொடங்கும் போது கலந்துரையாடலில் உங்களை நடுவில் உக்கார வைக்கிறேன் என்று சின்னப்பிள்ளைக்கு லாலிபாப் கொடுத்து ஏமாற்றுவது போல் தமக்கும் புரியாது என்பது போல் பேசியது சிரிப்பாகத்தான் இருந்தது.
புரியாததுபோல் ஸ்கூல் பொண்ணு மாதிரி சொன்ன இடத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போவெல்லாம் சிரித்துக்கொண்டு அங்கிருந்தவர்களின் வேறுவேறு மனநிலையை உள்வாங்கும் குதூகலத்துடனே இருந்தேன்.
நிகழ்ச்சி தொடங்கி கொஞ்சம் போன பிறகுதான் புரிந்தது நாம் நினைத்தது எதையும் அங்கு பேச முடியாது. அவர்கள் கேட்கின்ற கேள்விக்கு மட்டுமே நாம் பதில் சொல்ல அங்கு அமர வைக்கப்பட்டிருக்கின்றோம் என்று. அமர்ந்திருந்த பெண்களில் அனைவரும் நிகழ்வை வழிநடத்துனர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயாராகி ஒலி பெருக்கியை கையில் வாங்க காம்பயரிங் செய்பவரோ தம் கேள்வியை மாற்றிக் கேட்டு வைக்க பேச நினைத்தவர்கள் தடுமாறினார்கள் . பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து உலகளாவிய கருத்துக்களையோ, அதைத் தவிர்க்கும் தத்துவங்களையோ சொல்ல முன் வருகின்ற போது இல்லை இல்லை நீங்கள் சம்பந்தப்பட்ட அனுபவங்களை மட்டும் சொல்லுங்கள் போதும் என்று சொல்ல,
மேடையில் பேசியே தீர வேண்டும் என்ற நிலை வரும் போது இதுவரை நாம் பேசக் கூடாது என்று வைத்திருந்த பலவற்றைத் துப்ப வைக்கின்றனர்.
ஏறக்குறைய மஞ்சள்தெளிச்சு, மாலை போட்டு, ஆரத்தி காண்பிச்சு பலி கொடுப்பது கண் முன்னால் நடந்தேறியது.
ரொம்ப அழகாகப் பேசிய வக்கீல் பெண்கள், நீங்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களைச் சொல்லுங்கள் என்றவுடன் பொய்யான சம்பவங்களைக் கூட உண்மை போல பேசிய கல்லூரிப் பெண்கள், தாங்கள் பாதிக்கப்பட்டோம் என்பதை மட்டுமே உணர்ந்து மீண்டுவர நினைக்கும் பெண்கள், விழிப்புணர்வு இல்லை என்று சொல்லிய விழி இழந்த வக்கீல் பெண்மணி, இவர்கள் எல்லாம் கலக்கினார்கள் பேச்சில்.
வன்முறை என்பது அடிவாங்குவதும், அடிகொடுப்பதும், இரத்தம், இவையோடு மட்டுமல்ல உணர்வும் சேர்ந்த ஒன்று என்று நானும், verbal abuse கூட வன்முறைதான் என்று சொல்ல முயன்ற வக்கீலின் கருத்தும் தொகுத்து வழங்கியவர் நிராகரித்ததற்கு அது புரியாமை காரணமா, அல்லது அதை முன்னிலைப்படுத்த அவர்கள் விரும்பவில்லையா என்பதும் கூட கேள்விதான்.
நிகழ்ச்சியை வழி நடத்துபவரிடமாவது குறைந்த பட்சம் சிறப்பு
அழைப்பாளர்கள் என்ற அறிமுகத்தைக் கூட செய்யவில்லை இவர்கள். ஒவ்வொருவரும் ஒலிபெருக்கியை
வாங்கி பேசுவதற்கே பெரும் பாடுபட வேண்டியிருந்தது.
ஒட்டு மொத்த வன்முறையும் ஈவ்டீசிங், கொலைகள், பாலியல் வன்முறைகள், ஆசீட் வீச்சு என்பதை சிறிதாக்கி பெண்களே பெண்ணுக்கு எதிரி, பெண் உடை வன்முறைக்கு காரணமா?, வலைத்தளங்கள் எதிரானவை பெண்களுக்கு, பாதுகாப்புக்கு ஏதாவது உடன் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தனியாக பெண்கள் போக வேண்டாம் என்ற அறிவுரையையும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சி முடிந்தது பரிதாபம்தான்.
ஒட்டு மொத்த நிகழ்ச்சியும் பெண்பத்திரப்படுத்தப்பட வேண்டியவள் என்று மீண்டும் சொல்லி முடிக்க எரிச்சல் வந்தது. கையில் ஆயுதங்கள் தேவையில்லை எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடிய திடம்தான் வேண்டும், ஆண்களைக் கண்டு பயப்படும் மனோநிலையும் உடலைத் தூக்கி பத்திரப்படுத்தும் மனோநிலையையும் தூக்கி எரிய வேண்டும் எனப் பேசியதையெல்லாம் எடிட் செய்து விட்டு, பேஸ் புக்கில் தொலைபேசி எண் எடுத்துவிட்டேன் என்று சொன்ன கடைசி வரியை மட்டும் எடிட் செய்து போடுகின்ற போது பார்க்கின்ற பெண்களின் வீட்டில் பார் நீயும் பாடம் கற்றுக் கொள் பேஸ் புக்கே வேண்டாம் என்று சொல்ல வைக்கின்ற எதிர் வினையைத்தான் நிகழ்ச்சி செய்தது என்ற போது எரிச்சல் வந்தது.
கடைசியாக நிகழ்ச்சியின் போது பெயர் போடுவோம் என்று சொன்ன கதையும் கடைசிவரை நடக்கவில்லை.
8.45க்கு நிகழ்ச்சி ஒலிபரப்பாகப் போகின்றது என்று தொலைபேசிய Zee
team நபருக்கு போன் செய்து கேட்டேன்.
Name card போட மறந்திருப்பாங்க நீங்க விவேக்கிட்ட பேசுங்க என்றார்.
விவேக்கிடம் மறுநாள் காலையில் தொலைபேசியில் பேசிய போது “அப்புடியா போட மறந்திருப்பாங்க சாரி” என்றார். நேம் கார்டு போட பேர் கேட்டு வாங்கவே இல்லையே என்றதும் கொஞ்சநேரம் அமைதியாயிருந்துவிட்டு இப்ப நீங்க போன் பண்ணி கேட்டாப்பில நேம் கார்டு திரும்ப போடவா முடியும் என்று குரலை உயர்த்திய இவர்களிடம் பேசிப் பயனில்லை. எல்லாம் திட்டமிட்டே நடக்கின்றது. எல்லா மனித உணர்வுகளும் இவர்களுக்கு சந்தைப்பொருளே இனி பேச ஒன்றுமில்லை எனும் போது. நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டது என் தவறு என்ற வார்த்தையோடு உரையாடலை முடித்துக் கொண்டேன்.
பத்திரிக்கைகளில் கொடுத்த படைப்புகளை இதுவரை எக்காரணம் கொண்டும் எடிட் செய்ய அனுமதித்ததில்லை சின்னத்திரையிடம் அதைக் கோர முடியாத போது விலகி விடுவது உத்தமம்.