சூரியாள்

Thursday, March 30, 2006
மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்


இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று தகவல் தொழில் நுட்பமும், மாற்றங்களில் ஒன்று மனிதன் இடம் பெயர்வதும்
தகவல் தொழில் நுட்பம் உலகை சன்னல்களும் வாசல்களும் இல்லா பெருவெளியாக மாற்றியிருப்பது உண்மைதான் , பெண்ணுக்கு மட்டுமல்ல மனிதத்திற்கே , இதுவரை பயன்பாட்டில் இல்லாத மிகப் பெரிய வெளி உலாவக் கிடைத்திருப்பது உண்மைதான். நமக்கும் மகிழ்வுதான் என்ற போதும் புதிய வழிகளில் பயணிப்பவர்கள் வர இருக்கும் புதிய இடர்ப்பாடுகளையும் சந்திக்க நம்மை தயார் படுத்திக் கொள்வதும் இன்றியமையாததாகின்றது. இன்று திறந்திருக்கும் வெளியிலிருந்து பல்வேறு கலாசார பண்பாட்டு மொழி , வர்க்க , பொருளாதார பாதிப்புகள் நமக்குள்ளும் சாதக பாதகங்களைத் தந்து போவதும் தவிக்க முடியாததாயிருக்க இன்று அவை பெண்ணியச் சிந்தனைக்குள் தந்து போய்க் கொண்டிருக்கும் எல்லாவிதமான மாறுதல்களையும் நோக்கும் கட்டாயத்தில் இருந்து வருகின்றோம்

மொழி காலம் காலமாக விஞ்ஞானம் இயந்திரங்கள் என்று வளர்ச்சி வராத காலங்களில் கூட மனித உணர்வை ஒரு இடமிருந்து மற்ற இடத்திற்கு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எல்லாம் அழிந்த போதும் அழிந்து விடாத மனித வாழ்வின் எச்சமாக பதிவாக ஆவணமாக இருந்து கொண்டிருக்கும் ஒரு ஊடகமாக இருந்து வó¾¢Õ츢ýÈÐ. þÐŨà எழுதப் பட்ட இலக்கியங்களின் பெரும்பான்மை ஆண்களாலயே எழுதப் பட்டிருக்கிறது அதுவும் காலம் காலமாக தனக்கு உபயோகப் படுகின்ற விதத்தில் உடமைப் படுகின்ற விதத்தில் அதையும் பெண்ணே மனமுவந்துசெய்து விடுகின்ற செய்ய நினைக்கின்ற கருத்தியல்களை வடிவமைக்கிற ஊடகமாகத்தான் இன்று வரை இருந்து வந்திருக்கின்றது. ஆதிக்க சமுதாயம் ஆணுக்குள் எப்படி ஆதிக்க எண்ணங்களை திணித்திருந்ததோ அதே போல் பெண்ணுக்குள்ளும் அடிமை மனோபாவங்களை திணித்ததோடு மட்டுமல்லாது அதை அடையாளம் காண முடியாத அளவுக்கு பெண்ணையும் வைத்திருந்ததை காலம் காலமாக எழுதப் பட்ட இலக்கியங்கள் சொல்லும் காட்சியாக நம் முன்னால் இருக்கின்றன.
முனையடிக்கப்பட்ட கயிற்றில் கட்டப் பட்ட செக்குமாட்டுத் தனமான யாராலோ தீர்மானிக்கப் பட்ட வாழ்வு மாறிய காலங்களிலும் கூட கயிறுகளின் நீளம்தான் கூடியிருக்கின்றதே தவிர முனைகள் பிடுங்கப் படவில்லை.
ஒவ்வொரு நிஜமான படைப்பாளியுமே இதுவரை இருந்தவற்றின் மீது தனக்கு ஏற்படுகின்ற கேள்விகளை மாற்றுப் பார்வையில் சமூகத்தின் முன்வைத்து அதன் மூலம் புதிய சமுதாயக் கருத்தியல்களை உருவாக்கவே முனைகின்றான் அப்படி இருந்த போதும் பெண் பக்க பார்வை இருளுக்குள்ளேயே இருந்து வருகின்றது
எனது தொடர் வாசிப்பில் புகழ் பெற்ற எழுத்துக்களாய் முன் வைக்க பட்ட நாவல்கள் கூட எனக்கு என் கருத்தோட்டங்களுக்கு , பெண்ணுக்கு விரோதமாகவே தெரிகின்றது. நோபல் பரிசு பெற்ற அந்நியன் நாவல் தொட்டு, இன்¨Èய எஸ். ராமகிருஷ்னணின் நெடுங்குருதி வரை கவனிக்கப் படாமல் விடப் படுகின்ற பகுதி பெண்ணுக்கு விரோதமாக மாறி விடக் கூடிய அபாயம் இருந்துகொண்டே இருக்கின்றது.
அதே போல் எது நல்ல எழுத்து என்று தீர்மானிப்பவர்கள் ஆண்களாகவே இருக்கின்றார்கள். எழுதப் படுகின்ற பெண் படைப்புகளும் ஆண்களின் அங்கீகாரத்திற்கே காத்திருக்கின்றன. பா. விசாலத்தின் “ மெல்லக் கனவாய் பழங்கதையாய் “ எனும் நாவலெனக்கு மிக முக்கியமான ஒன்றாய் தோன்ற . அது பேசப் படாமல் போன நாவல்தான்.அது அளவுக்கு அதிகமாக பேசுகின்றது. அலுப்பைத் தருகின்றது எனும் குற்றச் சாட்டு முன் வைக்கப் படுகின்றது. ஆம் பெண் அப்படியான அலுப்பு தரக் கூடிய வாழ்க்கையைத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அதை எழுதினால் அலுப்பாகத்தான் இருக்கும். அது இதுவரை ஆண்களிடமிருந்து வராத குரல். என்று பார்க்கக் கூடிய பார்வை பெண்களிடம் கூட இல்லை.
இன்றைக்கு ஆணுக்கு நிகராய் பெண் எதுவும் செய்ய முடியும் என்ற நிலைமை சாத்தியமாக பெண்ணுக்குள் இதுவரை பார்க்கப் படாதிருந்த பக்கம் பார்க்க சாத்தியமாகின்றது. பெண் கேள்வி எழுப்ப வேண்டிய நிர்பந்தமும் , புதிய குரலாக இதுவரை ஒலிக்காத குரலாக உணரப் படலாம். என்னைப் பொறுத்தவரை அந்த குரல் கூட புதிய அடைமொழிக்குள் தன்னை அடைபட அனுமதிக்கக் கூடாது என்று தான் சொல்வேன்.

சுற்றி வளைத்து
வேலி கட்டி
அதற்குள் என்னைச்
சுவாசிக்கச் சொல்வதுதான்
நீ காட்டும் சுதந்திரம்

சுயத்தையெல்லாம்
ஒப்படைத்து விட்டு
வைக்கோல் பொம்மையாகி
உன் இழுப்புக்கு
ஆட வேண்டுமென்றே
நீ நினைக்கின்றாய்
நீ சொல்வது தான் வேதம்
நீ காட்டுவது தான் உலகமெனில்
எனக்கெண்று
இதயமும் கண்களும் எதற்கு வன்மப் படுதல், அனார்

இச்சமூகம் உனக்கான் இயல்புகள் என்று கட்டமைத்து வைத்திருக்கின்ற இயல்புகளை தாண்டிய வெளிக்கு பயணப் படுதலில் பல சிக்கல்கள் இருக்கின்றது ஒன்று நாங்கள் புதிய வெளியாய்த் தீர்மானிப்பது இன்னும் மோசமான ஒன்றாகவும் இருந்து விட வாய்ப்பும், இன்னொன்று புதிய வெளிகளைத் தேடுவதிலேயே தொலைந்து போகவும் , தானே முடங்கிக் கொள்ளும் மனோ நிலைக்குத் தள்ளப் படுவதும். அப்போ புதிய வெளிகளை கண்டடைதல் மட்டுமல்ல
அதில் எதை கட்டமைக்கப் போகிறோம் என்பதை தெளிவாக திட்டமிடா விட்டால் ஏற்கனவே ஆக்கிரமித்து பழகியுள்ள சிந்தனைகள் கருத்தியல்கள் புதிய வெளிகளையும் சூழ்ந்து விடும் வாய்ப்பு இருக்கின்றது.
ஆண்டாண்டு காலமாக பெண்ணுக்கு அளிக்கப் பட்ட சாபங்களும் சரி வரங்களும் சரி ஆணுக்கு சாதகமானதாய் பெண்ணுக்கு வலி இல்லாது சிலுவையறையக் கூடியதாகவும் தான் இருந்து வந்திருக்கின்றது.
பெண் உணர்வுகள் புனிதம் ஒழுக்கம் குடும்பகௌரவம் எனும் பேரில் பேசப் படாமலும் சொல்லப் படாமலுமே இருந்திருக்க இன்று கலகக் குரல்களாக தன்னை வெளிப் படுத்திக் கொண்டு வரும் குரல்கள் எதை சொல்லுகின்றன. அப்படி சொல்வதனால் விளைகின்ற மாற்றங்கள் பெண்ணுக்கு சாதகமானதா? பாதகமானதா? பெண்ணுக்கான நிஜமான பிரச்சனைகளை முன் வைக்கின்றதா?
இவ்வளவு அறிவியல் பொருளாதார கல்வி என மாறிய போதும் , வாழ்வியலில் நாடு மொழி சமயம் வேறு பாடின்றி பெண்ணை தீர்மானிப்பவன் ஆணாகத்தானிருக்கின்றான். தேசிய விடுதலையில் பெண்ணுக்கான விடுதலையை இணைத்தே கொண்டு வர முடியாத துரதிர்ஷ்டம் தான் நேர்ந்திருக்கின்றது. எழுத்திலும் அதில் இயங்குபவர்கள் மத்தியிலும் அதன் பிரதி பலிப்பு தொடரத்தான் செய்கின்றது.ஆக ஆண் தீர்மானிக்கின்ற ஒன்றாகத்தான் இன்றும் பெண் எழுத்து இருந்து வருகின்றது
ஆதிக்க மனோபாவங்கள் தீர்மானிக்கின்ற ஒன்றை மறுதலித்து இனிவரும் சந்தர்ப்பங்களிலும் தீர்மானங்கள் பெண்ணுக்கு விரோதமாக போகா வண்ணம் பேசப் படுவதாக இருப்பதை வழி மொழியும் குரலையே நான் பெண் மொழியாக அடையாளம் காண்கின்றேன். அந்த மொழியும் கூட பெண்ணுக்கான மனித இருப்பை பேசும் மொழியே .
நானூறு பக்கம் விடாது எழுதப் பட்டிருக்கின்ற நாவலில் மருந்துக்கும் கூட பெண் இல்லாமல் போக நேர்ந்திடுகின்றது. அதில் வருகின்ற பெண்கள் எல்லாம் ஆண்களின் சுகத்துக்கானவர்களாகவும் அவர்கள் வடிவமைத்த பெண்களாகவே இருக்க, பெண்களின் எழுத்துக்களின் வீச்சைப் பார்ப்போம்.
எனக்கு என்று
சொற்கள் இல்லை
மொழி எம்மை
இணைத்துக் கொள்வதுமில்லை
உமது கதைகளில்
யாம் இல்லை கனி மொழி
இப்படியாக புலம்பியது போனது. பொதுவாக சொல்வதுண்டு பெண் எழுத்துக்கள் புலம்பல்கள் என்று ஆனால் இன்று புலம்பல்களாக தம் வலிகளை சொல்லாமல். ஓங்கிய குரலில் அதட்டி கை மேல் இருக்கும் கால் நகர்த்தச் சொல்லும் குரல் புதிய குரல்.
உன் மேற்பார்வையின் கீழ்
வாழ்வை
கோப்புகளாக்கி
பூட்டி வைக்கவும் முடியாது

நான் அதிசயப் புதிரோ
ரகசியப் புதையலோ அல்ல
ஒழித்து புதைத்து விட்டு
பூதமாய் காவல் காக்க
……………..
எனது குரல்
தனித்துவமானது
என் ஆற்றலும் சிந்தனையும்
உறுதியானவை

திருத்தச் சட்டங்களாலும்
புதிய ஏற்பாடுகளாலும்
வேலிகளை விசாலப் படுத்தாமல்
விலகி நில் கோரிக்கை , அனார்

பல பெரும் இலக்கிய வாதிகள் சொல்வதுண்டு பெண் எழுத்தில் அரசியல் இல்லை அது வெறும் வீட்டுக்குள் சின்ன வட்டத்துக்குள் முடங்கி கிடக்கின்றது என்று. எனக்குத் தோன்றுகின்றது பெண் எழுத்தில் தான் அவளது பார்வையில் அவள் காணுகின்ற ஒவ்வொரு பொருளும் அவள் பேசுகின்ற விடயமும் அவளுக்கானதாய் மட்டுமல்லாது உலக விசயமாகவும் மாறிப் போகக் கூடிய சாத்திய கூறுகள் இருக்கின்றன.

யுத்த கால
இரவொன்றின் நெருக்குதல்கள்
எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்கள் ஆகிவிடும் சிவரமணி

சிவரமணியின் இக்கவிதையில் தன் குழந்தைகளை பற்றி எழுதத் தொடங்கும் பெண் பார்வையில் ஒரு போர்க்கால அரசியல் மெல்லிய , இழையாக அதே நேரம் வலுவான இழையாக இருப்பதை காண முடிகின்றது.
ஏற்கனவே இருந்த கருத்தியல்களை மறுத்து இன்னுமொரு புதிய கருத்தியலை உருவாக்க தலைப்படுமானால் அது அரசியல் கவிதை. ஒவ்வொரு பெண்ணும் ஆணின் பார்வையிலேயேதான் பார்க்க பழக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றாள். இதிலிருந்து மாறுபட்டு சுயமாக வெளிப்பட்ட சிந்தனைகளை ஒத்துக் கொள்வதென்பது பலருக்கும் இயலாததாயிருக்க அதை தொடர்ந்து செய்வதே ஒரு அரசியலாகின்றது பெண்ணுக்கு
என் வெற்றிகளை
உன் பெருந்தன்மையாய்
மாற்றிப் போடும் சூழ்ச்சி என்பதிலும்

போர்க்கள விதிகளை
என் சந்ததிகளை முன்னிறுத்தி
முடிச்சுப் போடும் நீ என்பதிலும்
அரசியலாய் பார்க்க வேண்டிய கோணங்கள் இருக்கின்றது
பெண்களின் வாழ்க்கை பல அரசியல்களை உள்ளடக்கியது.
உனக்கு பொழுது போக்காகவும்
எனக்கு போராட்டமாகவும்
போய் விட்டது
(என்) வாழ்க்கை

தாழ்மையை
பற்றுதலை
உன் திமிர் பிடித்த அதிகாரங்கள்
தாட்சன்யமின்றி
தண்டித்தன

தொன்மங்கள் நம் இலக்கியத்தின் புதையல்கள். அதை சரியாக இன்னமும் நாம் கண்டடையவில்லை. தொன்மங்கள் தொடர்பாக ஒரு வகை மலினப் புரிதல்களுக்கே நாம் இந்த ஆதிக்க சமுகத்தால் பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறோம். கல்லைக் கண்டால் நாயைக் கணோம் நாயை கண்டால் கல்லைக் காணோம் எனும் பழமொழியை எபடி தத்துவார்த்த ரீதியாக பார்க்கத் தவறி நாயையும் கல்லையும் பார்க்கின்ற போதெல்லாம் நினைவு கூறுகிறோமோ அது போல் சில தொன்மங்கள் பொருள் மாறி குணம் மாறி போய் விட்டது. ஆண்கள் பார்வையிலேயேதான் அது நமக்கு வழங்கப் பட்டிருக்கின்றது.அதையும் மாற்றி யோசிப்பது நம் கடமையாயிருக்கின்றது
தாகம் தீர்க்கும் மணல்கள்

விடிகின்ற பொழுதொன்றில்
சேவல்களாய் கூவிய
இந்திரன்கள் திகைக்க
கமண்டலமிருந்து கை ஊற்றிய நீர்
தெளிக்கத் தேடிய ஜடப் பொருள்
காணாது கௌதமனும் சிலையாக

தின்று விடவும்
சாபத்தினால் உறைய விடவும்
நீங்கள் தீர்மானித்திருந்த
நானென்ற
என் உடல்தனை அறுத்து கூறிட்டு
திசையெங்கும் எரிய
சூனியத்தில் திரிந்தலைகின்றன


உடலில்லா எனை
தழுவ முடியாது இந்திரன்களும்
தலை சீவ முடியாது பரசு ராமன்களும்
சாபமிட முடியாது கௌதமன்களும் இருக்க

சேவல்களால் கூவாத பொழுதிலும்
சூரியன்கள் உதிக்காத தருணங்களிலும்
எனக்கான விடியல்கள் உதயமாகின்றன

ஆறுகள்
சாபமேற்ற அகலிகைகளால் நிரம்பியும்
நீர்கள் எல்லாம்
பரசுராமன் வெட்டித் தீர்த்த
உடல்கள் மிதந்தலைய
தீரப் போவதில்லை உங்கள் தாகங்கள்

வெளியெங்கும் என் காதல்கள்
நானே தீர்மானித்தாலொழிய
பானைகளாகாது சிதறிக் கிடக்க

ஒப்பீடுகள் தொலைத்து
உணர முடிந்த கணமொன்றில்
உடலாக மட்டுமல்லாது
இயற்கையின் எல்லாமாகி
மணல்களும்
நீர் சுமக்கும் பானையாகி
தாகம் தீர்க்கும் அதிசயம் காண்பாய் திலகபாமா

என் மௌனங்களை மேடையாக்கி
மரபுத் தூபப் புகை எழுப்பி
புனிதக் கூண்டுகளை வடிக்கிறவர்களே
நான் நிமிர்ந்தெழும் நல்லோரையில்
இந்த பிரமிடுகள் எல்லாம்
என் சுட்டு விரல் குடைகளே
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் மீனாட்சி



இன்றைக்கும் பெண்களுக்கு ஆதரவாக என்று பல ஆண் கவிஞர்கள் பேசும் போது அது அபத்தமாக தொனிக்க ஆரம்பித்து விடுகின்றது. அவர்கள் பேசுகின்ற தொனிகளில் ஆடு நனைகிறதே என்று அழும் ஓநாயின் குரலாகவே ஒலிக்கிறது.
. இன்னமும் இலக்கியவாதிகள் மத்தியிலும் கூட “ பாலியல் சனநாயகத்தை” மதிக்கிறவன் எனும் அத்திப் பழ வார்த்தைகளுக்கு ள் நெளியும் புழுக்களை அடையாளம் காணத் தவறி விடுவதை முற்போக்கு பெண்ணியம் பேசும் பெண்களிடம் கூடப் பார்க்கின்றேன்
வாசகனாய் ஒரு படைப்பாளியின் பின் புலங்கள் கவிதை வாசிப்பவனுக்கு தேவையில்லை என்றாலும், ஒரு சமூகத்தை அவதானிப்பவராக செயல்பட வேண்டிய கட்டயத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்க பெண்ணியம் பேசுவது அரசியலிலும் சரி இலக்கியத்திலும் சரி புகழ் அல்லது பொருள், சிலநெரம் பெண் சுகம் தேடுவதற்கான ஆயுதமாக கருவியாக இன்று மாறியிருக்கின்ற சூழலில் இவ்வளவு நீண்ட அரசியலை சாக்கடையின் வீச்சத்தை தனது கவிதைகளில் பெண் கவிஞர்களால் தந்து போக முடிகின்றது
காசு கொடுத்து
ஆம்பிளை வாங்கி
அதற்கு பணிவிடையும் செய்யும் அவலங்கள்
நான் சொல்ல
விழி விரித்துக் கேட்கிறாள் மகள்
ராஜாராணி கதை கேட்கும் பாவனையில்
போர் தருகின்ற
சோகங்களுக்குள்ளாலேயும்
ரகசியமாய்
சிலிர்த்துக் கொள்கிறேன்
புலம் பெயர்ந்தமை
தங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம்
என் மகள்களுக்கும்
நம் பெண்களுக்கும் வசந்தி ராஜா

உறிஞ்சி உறிஞ்சி
கனவுகளைக் குடித்தது
இரவுப் பெரும் நுளம்பு அனார்

இந்த இரு கவிதைகளும் அதிர்வுகளைத் தரவேண்டும் என வார்த்தைகளைத் தேடி எடுக்காது எளிய வார்த்தைகளில் உணர்வுகளை அதிரக் கொட்டி விட்டுப் போகின்றது .
இதுவரை இருந்திருந்த படிமங்களை மாற்றிப் போடுகின்றது.
வேர்களில் எடுத்த வலி
வண்டுகளோடு குலாவும்
பூக்களுக்குப் புரிவதே இல்லை அனார்

இதுவரை பூக்களை பெண்களுக்கு உவமையாக்கி படிமமாக்கி சொல்லித் திரிந்த மொழிக்கிடை எந்த வித பிரயத்தனமுமின்றி அதீதங்களுமின்றி மாற்றிப் போட்டு விடுகின்றது.
எத்தனை தீப்பந்தங்கள்
எரிந்தாலும்
சூரியனைப் பற்றவைக்க
உன்னால் முடியாது அனார்
ஒருகவிதையின் முக்கிய அம்சமே கவிதைக்குள் இடமும் காலமும் உயிர்த்திருப்பது தான் . பெண்களின் கவிதைகளில் இதுவரை பாடல் பெறாத புதிய பொருட்கள் அவர்களின் இருப்பாக இருந்தவற்றை கேள்வி எழுப்பவும் , அவளுக்கு மட்டுமாய் இருந்திருந்த எண்ணங்களை பொதுமைக்கும் கொண்டு வருகின்றது
அம்மி

வேகமாய்த் திரும்புகையில்
இன்றும் காலில் இடறிற்று
கருங்கல் அம்மி
‘அரைக்கவும் ஆட்டவும்
என்னென்னவோ இருக்க
எடத்தை அடச்சிக்கிட்டு
ஏந்தான் இருக்குதோ?
இப்படி
அன்றாடம் மாமியார்
கண்டனம் தெரிவித்தும்
ஆசை அம்மியை
அறுத்தெரிய மனசில்லை

அம்மா வீட்டில் இது
சும்மாவா இருந்தது?
வெள்ளைத் தேங்காயும்
கருப்பு மிளகும்
பச்சை மிளகாயும்
சிவப்பு வற்றலுமாய்
தால லயத்தோடு
அம்மா அரைக்கையிலே
ஆத்துக்கு அக்கரையிலே
அழகருக்கும் வாயூரும்

இன்றோ
அவசர உலகத்தில்
அடுக்கு மாடிக் குடியிருப்பில்
பதுங்கிக் கிடப்பதற்கு
முற்றமோ புழக்கடையோ
ஒதுங்கிக் கிடப்பதற்கு
திண்ணையோ இல்லாமல்
கவனிக்க ஆளின்றி
காய்ந்திருக்கும் வெறுங்கல்லாய்
வயோதிகம் போல் அம்மியும்
ஆயினும் ஓர் நாள்
மழைநாள் இரவில்
மின்சாரம் தடைபட்டுச்
சிம்னி கதகதப்பில்
ராச்சோறு சுவைப்பதற்காய்
பருப்புத் துவையலதை
கருங்கல் அம்மியிலே
வேடெல்லாம் மணந்தது
அம்மாவின் வாசனையில் வைகை செல்வி

இக்கவிதையை நகரத்து குடியிருப்பின் வலிகள் மதுரை கள்ளழகர் திருவிழா, அம்மா பாட்டி கவனிக்கப் படாத வயோதிகம் மாமியார் மருமகளிடையேயான தர்க்கங்கள் என எத்தனையோ வெறும் அம்மியை முன்னிட்டு வைக்கப் படுகின்றது. இக்கவிதைகளில் அம்மி அம்மியாக இல்லாது மொழி பெண்ணுக்கான மொழியாகவும் மட்டுமல்லாது , பொதுப் பார்வைக்கும் வருகின்றது.
வருகின்றது. இதுவரை கவிஞர்களிடமிருந்து வராத பார்வை.
பல்லக்கு தூக்கி

நான் உன்னுடைய நாட்டிற்கு
திரும்பி வந்த அகதி
கடந்த காலப் புழுதி மயக்கம் தெளிய
இப்போது
உன் மூச்சுக்கள் நிறைந்த
காற்றை சுவாசிக்கிறேன்

என்னதான் பெண் மொழி பெண்ணியம் என்று பேசினாலும் நமை அறியாமலேயே ஆதிக்க சமுதாயத்தின் மூச்சுக் காற்றை சுவாசிப்பவர்களாகவே இருக்க நேருகின்றது. இதை உணர்ந்து அடையாளம் காணத் தொடங்கும் பெண்ணினம் புது மொழியை , புதிய சிந்தனை வழியாக கைகொள்ளும்
ஆனால் இன்று பெண் மொழி உடல் மொழி என்ற பதத்தை எங்கிருந்து பெற்றோம்.
Women language, body language
மொழி பெயர்ப்புகள் சில நேரம் சரித்து விட்டு விடுகின்றன.
பெண் மொழியின் பரப்பு, மொழியின் இரத்தமும் சதையுமான உயிர்ப்பு இப்படியாக அர்த்தப் படுத்தலாமே அல்லாது உடல் மொழி , என மொழி பெயர்ப்பது விண்மீனை skyfish என்று மொழி பெயர்ப்பதற்கு ஒப்பாகும்.

வயிற்றுப்பசிக்காக
இருட்டில்
நிர்வாணப்பட்டது
சமூகக்குற்றம்.

எந்தப் பசிக்காக
அறிவுஜீவி கவிதைகள்
வெளிச்சத்தில்
அம்மணமாய்
வீதியில் ஊர்வலம் ?

உடல்கூட ஆயுதம்தான்
கண்ணகிக்கு-
ஈழத்து கண்மணிக்கு-
மணிப்பூரின் பெண்மணிக்கு.
உங்களுக்கு?

எழுதுங்கள் உடல்மொழியை
சிரங்குகள் இல்லாமல்.
அட.. சிரங்கு திணவெடுத்தால்
எப்போதாவது
சொறிந்து கொள்ளுங்கள்.
ஆனால் சொறிவது மட்டுமே வாழ்க்கையல்ல
சொறிந்து சொறிந்து
அதுவே சுகமாகிப் போனால்
எப்போது கிடைக்கும் இயல்பான
உங்கள் உடல்மொழி.?

பாலியல் விதிகளின்
கட்டுடைக்கப் பிறந்த
உங்கள் கவிதைகள்
உங்களையே
கட்டிப்போட்டு
உங்கள் முகம்மறைத்து
உங்களின் எதைக் காட்டுகிறது?
வன்புணர்ச்சியில் சிதைந்தால்
போராடலாம். நீங்களோ
தன்புணர்ச்சியில் அல்லவா
புதைந்துவிட்டீர்கள்.
எப்படி எடுக்கபோகிறேன்
உடைபடாமல்
உங்கள் தாழிகளை புதிய மாதவி



ஆக உடல்மொழி என்று மொழி பெயர்த்து விட்டு, உலக மயமாக்கலில் கடன் வாங்கிய அந்த உத்தியில் உடலை பற்றியும் உடல் சார்ந்த உணர்வுகளை பற்றியும் எழுதுவதுதான் சுதந்திரம் என்று இன்று எழுத்துக்கள் வலம்வரத் துவங்கியுள்ளன
காலம் காலமாய் ஒரு சிலருக்குள் இருந்திருந்த இயற்கையியலும் அதீதப் புனைவியலுமான படைப்புகள் “ துணிவான படைப்புகள்” எனும் பதாககைகளோடு இன்று உலாவருகின்றது. அதீதப் புனைவியல் மூலம் உலக நடப்பியலிருந்து தப்பித்தலைத்தான் செய்து வருகின்றன
எந்த வார்த்தையும் இலக்கியத்தில் தீண்டத் தகாத வார்த்தை அல்ல. ஆனால் பெண் உடல் உறுப்புக்களை பற்றி பேசுவதாலேயே பெண்மொழியாகவும் ஆகி விடாது.
மொழி என்பது வெறும் வார்த்தைகளின் கூட்டம் அல்லாது உணர்த்தப் படுகின்ற விசயத்தினாலேயே வலுப் பெறுகின்றது
உடலை கொண்டாடுவதாகக் கிளம்பியது சரிதான். ஆனால் காலம் காலமாக உடலைக் காரணமிட்டே நம்மை முடக்கத் துவங்கியிருந்த சமூகத்தின் முன் உடல் மட்டுமல்ல பெண் என்று நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குள் பெண் இருக்கின்றாள்.
பெண்ணின் வேலைகள் சமூகப் பணியாக பார்க்கப் படாமல் தனிமனித வேலையாக பார்க்கப் பட்டு மலினப் பட்டுக் கிடப்பதை உடல்மொழி தூக்கி நிறுத்துமா?
அழகிய பெண்களை கொடுங்கள் கவிதாயினிகளாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லித் திரிபவர்களுக்கும் , இதுவரை என்னுடன் படுக்காத பெண் கவிஞரே இல்லை என பெருமை பேசும் கவிஞர்கள் பத்திரிக்கை காரர்கள் , இதுதான் கவிதை இன்றைக்கு இதுதான் ட்ரெண்ட் , யாரும் பேசாத விசயத்தை பேசுங்கள் என எழுதத் தூண்டுகின்ற அதே இடத்திலிருந்து எழுதப் படுகின்ற உடல்மொழிக் கவிதைகள் அந்த பெண் கவிஞர்களேயே தூண்டிவிட்டவர்கள் இடமிருந்தாவது காப்பாற்றுமா?

சமூகத்தை மாற்றாது மொழியில் மட்டும் மாறுதல் உலகமயமாக்களின் பெட்ரோல் விலையேத்தம் அடுப்படியில் அடுப்பு வரை பாதிப்பதை ,உணர்த்துவதையும், தேசிய போராட்டங்களும் தேடித் தராத பெண்ணுக்கான மனித இருப்பையும் பெற்றுத் தருமா?
பெண் சுயமாக வெளிக்கிளம்பி விடக் கூடாது. படுக்கையறையிலும் அடுப்படியிலும் இருப்பதே சுகம்என தீர்மானித்து வலை விரித்து வைக்கின்றார்கள். மொத்தத்தில் பெண்ணுக்கெதிரான சதி அவர்களே அறியாமல் நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது

பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு உண்மையான எதிர்ப்பாக இல்லாமல்கட்டுப்பாடற்ற தனி மனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறிவிடும் அபாயம் இருக்கின்றது

பெண் மொழி , பெண்ணியம், தலித்தியம் என்கின்ற சொற்கள் கூட மீண்டும் பேதங்களைத்தான் நிலை நிறுத்தப் பார்க்கின்றதுபெண்களுக்கான அல்லது ஒடுக்கப் பட்டவருக்கான உரிமை என்றல்லாது சக மனிதத்திற்கான உரிமை , கூடுதலாக காலம் காலமாக ஒடுக்கப்பட்டதை கணக்கிலெடுத்து தரப் படுகின்ற அங்கீகாரங்கள் ( சலுகைகளல்ல) என்ற வகையில் நமக்குள் இருக்கின்ற ஆதிக்க , அடிமை மனோபாவங்களைத் தகர்த்தெறிய வேண்டும்.
இவ்வளவு காலமும் ஆண் எழுதினான் பெண் எழுதினாள் என்ன?உடனே எழும் கேள்வி இது. பழிக்கு பழி வாங்குதல் என்பதை விட பழி செய்ய முடியாத தளத்தை உருவாக்குவது தான் முதன்மை பணியாக இருக்கிறது பெண் ஆண் போல் மாறுவது சுதந்திரமல்ல, அவரவர் அவரவராக இருப்பதுவே சுதந்திரம் சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் எழும் போது விட்டுக் கொடுத்தல் போய் விடுமோ பயம் வருகின்றது. நீ எனக்காக விட்டுக் கொடுக்கலாம் நான் உனக்காக விட்டுக் கொடுக்கலாம், ஆனால் பெண் என்பதற்காக விட்டுக் கொடுக்க நேருமானால் எதிர்ப்பு குரல்களை பலத்து ஒலிப்போம். அது பெண்ணுக்கான மனித இருப்பை ஒலிக்கும் மனித மொழியாக பொதுமைக்குள் உணரப் பட வேண்டும்

நானே பாரதி
என் காலத்தின் கவிச் சக்ரவர்த்தினி
என் கவிதை சோதி மிக்க நவ கவிதை
இந்த விதை களர் நிலங்களிலும்
கிளர்ச்சி செய்ய்யும்
மண் கீறும்
ஊற்றடைப்புகளை
வெடியெனத் தகர்க்கும்
இரா மீனாட்சியின் வரிகள் நமக்கு பாதையிட்டு செல்லட்டும்
posted by mathibama.blogspot.com @ 3/30/2006 08:10:00 am  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates