செம்புலப் பெயல் நீர்
திலகபாமா
உனக்காக நானும் காத்திருக்கவுமில்லை
எனக்காக நீயும் தவமிருக்கவுமில்லை
வானோடு தொடர்பில்லா நிலவாய்
கூடவே இருப்பதாய் தோன்றிய
சரீர சந்திப்பு நிகழவுமில்லை
மொழியால் உண்டென்பதை
விண்டுரைக்கவுமில்லை
பரிசுகளால் இடைவெளிகளை
நிரப்பிக் கொள்ளவுமில்லை
தாண்டிச் செல்கையில்
விழிகளால் விழுங்கிக் கொள்ளவுமில்லை
எல்லா இல்லைகளுக்குமப்பால்
ஏதோ ஒன்று இருப்பதை
உன் குரலின் கனிவு எனக்கும்
என் பார்வை உனக்கும் சொல்லியபடியே இருந்தது
அவரவர் பாதையில்
என் கணவனாகவும் உன்
மனைவியாகவும்
உடன் வந்தவருடன் இனிதே நடந்தேகினோம்
வளர்ந்தது நமது நினைவுகளும்
தற்செயலாக சந்தித்த சந்தர்ப்பங்களில்
பரிமாறிக் கொண்டோம்
தட்டையான வார்த்தைகளால்
ஆனால் அவை ஊறியிருந்தன
நம் உணர்வில் ஈரத்துள்
உனக்கும் எனக்கும் மட்டுமே ருசித்தபடி
சந்திக்கிறோம் ,
பிரிகின்றோம்
ஆனால் நினைத்தவுடன் உடன் இருக்கின்றோம்
பெயரில்லா உருவிலியாய்
உலாவி
மறைகிறது நம் உறவு
என் விழிகள் உன்னோடும்
உன் வாசம் என்னோடும் பயணித்தபடி
நன்றி : கல்கி
|
Post a Comment