சென்னை21.8.14
காலை 3 மணிக்கு விழிப்பு வந்து விட்டது. தூங்க முடியாது தவித்து கிளம்பத் தொடங்கி விட்டேன். உதய்பூரை நோக்கி கிளம்பியது என் பயணம். காரை 4.20 மணிக்கு அவசியம் வர வேண்டும் என்று சொல்லியிருந்தும் 5 மணிக்குத்தான் வந்தனர். விமானநிலையத்தில் அதிக கூட்டம். 4.30 மணிக்கு கிளம்பியிருந்தால் கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும். விமானம் டில்லியை நோக்கி கிளம்பியது. டெல்லி வந்து சேர்ந்து பின் அங்கிருந்து உதய்பூர் விமானத்தை பிடித்தேன். மெல்ல மெல்ல தமிழ் பேசியவர்களிடமிருந்து விலக நேர்ந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. இப்பொழுது முழுக்க என்னைச் சுற்றி நான் புரிந்து கொள்ள முடியாத பாசையில் பேசுபவர்கள்.
12.30க்கு உதய்பூர் வந்து சேர்ந்தேன். டாக்சி ஒன்று எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்த
அதே குறுகிய தெருக்கள், பொருத்தமில்லாத அலங்காரங்களுடன். வீடுகளுக்கிடையில் சில வீடுகள் ஹோட்டல்களாக மாற்றப்பட்டிருந்தன. துறுத்தலாக ஆங்காங்கே நிறைய இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். வெளிநாட்டு பயணிகளை எதிர்பார்த்தபடி பல கலைப்பொருட்கள் நிறைந்த கடைகள் ஆங்காங்கே இருந்தன.
2 மணிக்கு சித்தூர்கட் கிளம்பி போக விரும்பினால் கார் ஏற்பாடு செய்வதாக சொன்னான் ஹோட்டலில் ஒரு இளைஞன். சரி என்றேன் வந்து சேர்ந்தான் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கட்டி அணைத்து, மகிழ்வை பல விதத்திலும் பகிர்ந்து கொண்டான். “எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான் இங்கிவனை” பாரதியின் பாட்டு மனதில் ஓடியது.
சித்தூர்கட் கிளம்பிப் போகலாம், இதுவரை எப்பவும் தனியாக இருந்த அந்த பயணம் சோனுவால் சுவையாக மாற்றப்பட்டது. எனை
கவனித்துக் கொள்ளும் நபரோடு பயணித்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது.எனை எல்லா இடத்திலும்
வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்தான்
இராஜஸ்தான் மேட்டுப்பகுதிக்குள்ளே பயணமாகின்றோம். ஆங்காங்கே பசுமையான மலைக்குன்றுகள் அதை ஊடறுத்து போகும் சாலைகள் என சுவாரசியமான பயணம். வழியில் காரோட்டி தன் கதைகளால் நிரப்பினான். வழியெங்கும் சீமைக் கருவேலம், ஹிந்தியில் மிலாத்திபபுள் என்று அழைக்கப்படுகின்றது. வெளிநாட்டு கருவேலம் என்பதுதான் அதன் பொருள். (தேசிகா பபுளும்) உள்நாட்டு கருவேலமும் இருக்கின்றது காமராசர் விருதுநகர் மாவட்ட வறட்சியை பார்த்து கொண்டு வந்து போட்ட சீமைக் கருவேலத்தை, இந்திராகாந்தி பாலைவனத்தில் பசுமை விளைக்காதா என்றி யோசித்து போட்டதாகச் சொல்லப்படுகின்றது. வழியெங்கும் சாரை சாரையாக ஜனங்கள் மோட்டார் சைக்கிளிலும், ஆட்டோ, மற்றும் வசதிக்கேற்ப வாகனங்களிலும் பல வர்ணக் கொடிகளைக் கட்டியபடி ஜெசல்மீர் நோக்கி பயணிக்கின்றனர். ஒரு குடும்பம் முழுக்க பயணச்சுமையுடன் பைக்கில் குழந்தையோடு பயணிப்பது அதில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிப்பது காண்பதற்கு வருத்தமும் மகிழ்வுமான விசயமாக இருக்கின்றது. அவர்கள் அறுவடை முடிந்து விட்ட நாளை கொண்டாடுகின்றனர் வழிபாடும் வழிபாடுகள் வழியாக பகிர்தலையும். ஆம் வழிநெடுக பக்தர்களின்
பயணவழி சாப்பாடு விருப்பங்களோடு கவனித்துக் கொள்ளப் படுக்கின்றது தன்னார்வ தொண்டர்களால். ஜெசல்மீரில் பாபா ராம் தேவ் வழிபாட்டுக்காக போகின்ற பக்தர் கூட்டமது. ஆங்காங்கே சாலையோரங்களில் இருபக்கமும் கூடாரங்கள் அமைத்திருக்கின்றார்கள். சமையல் நடந்து கொண்டே இருக்கின்றது. கொடி கட்டி பயணிக்கின்ற பக்தர் கூட்டங்களை கூவிக் கூவி அழைக்கின்றனர். இளைப்பாற வண்டிகளை நிறுத்திவிட்டு உண்டு உறங்கி மீண்டும் பயணிக்கின்றனர் பக்தர்கள். நாமும் நிறுத்தி அவர்களோடு சாப்பிடுவோமா என்று கேட்கின்றேன். காரோட்டி இல்லை பக்தர்களுக்கு மட்டும்தான் நாம் வண்டியில் கொடி கட்டவில்லையே என்கின்றார். சரி பக்தர்களுக்கு கிடைக்க வேண்டியதை நாம் கேட்கக் கூடாது என்ற வார்த்தையோடு பயணிக்கின்றேன். மதியச் சாப்பாடு எங்காவது சாப்பிடலாம் என்று கேட்க காரோட்டி மங்கள்வாடில் சாப்பிடுவோம் என்கின்றார். அங்கே டால்மட்டி, குருமா ருசியாக இருக்கும் என்கின்றார். அது அவர்களின் பிரதேச சாப்பாடு ஆனால் சித்தூர் காட் கோட்டையை பார்ப்பதற்கு அதிக நேரமாகிவிட்டதனால் நிறுத்தி உணவு எடுத்தால் தாமதமாகிவிடும் என்று வேகமாக பயணிக்கிறோம். சோனு பயணத்தை அர்த்தமுள்ளதாக்கின்றான். ஒரு நீளமான மலை நெடுக கோட்டை தெரிகிறது.
தொடரும்
|
Post a Comment