கட்வார்
குந்தி பிறந்த ஊர் என்றார்கள்
ஒரு நதியும் நதியின் கரையில் ஒரு கோவிலும். உள்ளே நுழைந்ததும் கால் வரை நீண்டிருந்த
ஜடாமுடியை அவிழ்த்து விட்ட சாமியார் என் கவனத்தை
ஈர்த்தார். அதில் இருந்த நீரை உதறத் தொடங்கி முடிந்தார். கோவிலுக்குள் சென்று வழிபடுங்கள்
என்றார்கள். உள்ளே போனால் மண்டபம் ஒன்றும் அதனுள் உருண்டைக் கல்லாலான சிவ லிங்கமும்
இருந்தது. குந்தி பூஜை செய்த இடமென்றார்கள். சுற்றி முடித்து வர ஜடாமுடியை தலையைவிட
பெரிசாய் சுத்தி முடித்திருந்தார். போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை, கேட்க பயம. திரை மறைவிலிருந்த
குந்தி சிலையை காண்பிக்கின்றார்கள். வெள்ளை மார்பில் சிலை பார்த்து விட்டு வெளியே வர
துளசிச் செடிகளுக்கிடை கிடக்கிறது ஒரு சிலையின்
உடல் மட்டும், விதவிதமான பறவைகளின் சப்தம் எம்மை சூழ்ந்து கொள்ளுகின்றது. தனிமையில்
ஒரு மேடான பகுதியில் சுற்றி இருக்கின்ற பிரதேசங்களை நதியை பார்க்கக்கூடிய இடத்தில்
நிற்கிறேன். டிரைவர் உடன் வரச்சொல்லி அழைக்கின்றார். நதியை நோக்கி வேகமாக ஓடுகின்றார்.
பின்னாடியே ஓடுகின்றேன். பறவைகளின் குரல்கள் நெருக்கடியாய் சுழன்று வருகின்றன. நதி ஓடுகின்ற சப்தமும் கேட்கிறது. அதிக நீரில்லை
என்றாலும் கரைகளின் பாறைகள் கோவில்கள், வீடுகள் போலவே அடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒன்று
புரிபடுகின்றது மனிதன் தன் வாழுகின்ற முறைமையை இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்கின்றான்.
அறைகள் இயற்கையாகவே கற்களால் அடுக்கப்பட்டு மதில் சுவர்கள் போல் காட்சி தருகின்றன.
பாறைகளின் மேல்
நடந்து போகின்றோம். வானில் சூரியன் தகிக்கின்றான் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர்
அருகில் வருகின்றார். சூரியனின் காலடித் தடமென்றும், குதிரைகளின் குளம்படித் தடமென்றும்
பாறைகளில் சிலவற்றைக் காண்பித்துப் போகின்றார். பார்க்க அப்படியாகவே இருக்கின்றன. சம்பல்
பள்ளத்தாக்குகளைத் தாண்டிப் போகின்றோம். மலைக் கோடுகள் காட்சி தருகின்றன.
|
Post a Comment