ஒட்டக மனங்கள்
தகிக்கும் சூரியனை
வெறுக்கத் தொடங்கிய செடிகள்
முட்களாக மாற்றிக் கொள்கின்றன.
அவ்வப்போது மலரும்
வாசமுள்ள மலர்களை தென்றல்
அணைத்துக் கொண்ட போதும்
மறைய மறுக்கின்றன முட்கள்
நாளெல்லாம் பலரை சுமக்க
நேர்ந்து விட்ட ஒட்டகங்களாய்
தாகங்களை சேமித்து வைத்த
நீரில் கரைக்க வென்று
கால் புதைய நடக்கின்றன
எருக்களஞ்செடிகள்
இரவில் வாழ்ந்து விட நேர்ந்த
பூச்சியினங்களாய்
மணலில் விட்டு வந்த
அழியக் கூடிய
தடயங்களைத் தவிர
எதுவுமற்று இருக்கின்றது வாழ்க்கை
|
Post a Comment