வாழ்வில் புத்தகங்கள்
திலகபாமா
புத்தகங்கள் என்பது
வெறும் எழுத்துக்களைக் கொண்ட காகிதங்களின் தொகுப்பல்ல. மனித சிந்தனைகளின் வெளிச்சம்.பல்வேறு
பாதைகளை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரே வழிகாட்டி புத்தகங்கள் தான் மனித வாழ்வின் ஆசைகளுக்கும்,
யதார்த்தங்களுக்கும் இடையிலான ஊடாட்டத்தின் தடங்கள். அந்த தடங்களிலிருந்துதான் புதிய
சிந்தனைகளுக்கான முளைகள் வெளிவருகின்றன
என்னைப்
பொறுத்தவரை எந்தப் புத்தகமும் வெறும் கதையையோ,சம்பவத்தையோ , வெறும் தகவல்களையோ அல்லது
எந்த விதமான தீர்வுகளையோ தந்து விடுவதில்லை.அப்படி ஒரு வாசகன் வாசிக்க நேர்வது ஆழ்ந்த
வாசிப்பு இல்லை என்பதையே காட்டுக்கின்றது. ஒரு புத்தகம் ஒவ்வொரு வாசகனின் பார்வையிலும்
வாசிப்பிலும் ஒவ்வொரு விதமாக , வேறு வேறு பார்வைகளை, சிந்தனைகளை தந்து போவதாக இருக்கின்றது.
ஒரே மாதிரியான புரிதல்களும் வாசிப்பும் சாத்தியமில்லை என்பதே யதார்த்தம். ஏன் படைப்பாளியின்
பார்வையிலிருந்து கூட ஒரு புத்தககம் வாசகனை வேறு ஒரு இடத்திற்கு, வேறு அனுபவத்திற்கு
இட்டுச் செல்லக் கூடும். அந்த ஒரு அனுபவத்திற்காகவே புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசிக்கின்ற வாசகனாக
வைத்துக் கொண்டே இருக்கின்றேன்.
எந்த ஒரு வாசகனும்
அச்சிடப் பட்ட வார்த்தைகளிலிருந்து விடுபட்ட வார்த்தைகளை வாசிக்க பழகிட வேண்டும். அதனிடையேதான்
படைப்பின் ஜீவாதாரம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.அதை வாசிக்கப் பழகுகின்ற வாசகன் எழுத்தின்
வாசத்தை உணர்ந்து கொள்ளப் பழகி விடுகின்றான்.உணர்தல் பழகிவிட்ட பிறகு அவனது வாழ்வின் இருண்ட சம்பவங்களின் மேல் அவனுக்கான
வெளிச்சம் கிடைக்கத் தொடங்குகின்றது. அல்லது புத்தகம் பேசுகின்ற அனுபவம் அவனதுமாகி
விடுகின்றது
உலகத்தை மாற்றிய
புத்தகங்களின் பட்டியலில் 10 புத்தகங்கள் முதல் வரிசையில் இடம்பெறுகின்றன. அந்தக் கணக்கில்
வராத பல புத்தகங்கள் உலகத்தை இல்லை, ஒவ்வொரு தனி மனித வாசிப்பிலும் பலரை மாற்றியவண்ணமே
எப்பவும் இருக்கின்றன. பிரபலமான புத்தகங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு பிரதேசம் சார்ந்த எழுத்தும்
அதைக் கொண்ட புத்தகங்களும் உலகத்தின் பார்வையை
சென்றடையா விட்டாலும் தன் அருகிலிருந்த மனிதனை மனத்தை தொடும் வேலையை செய்கின்ற புத்தகங்கள்
ஒவ்வொரு வீட்டு அலமாரியிலும் வாசிப்பின் வாசம் முடியாது இருந்து கொண்டேதானிருக்கின்றது.
நல்ல புத்தகங்களின் வாசிப்பு எனை நிகழ் காலத்தை மட்டுமல்லாது, இறந்த காலத்தையும், வருங்காலத்தையும்
உணர வைக்கின்றது. கண் முன்னே பலநேரம் கொண்டு வந்து விடுக்கின்றது எல்லா காலங்களையும்..படைப்பாளி
தனி மனித அபிப்பிராயத்தின் அடிப்படையிலெழுதி வைத்தாலும் வாசகனுக்கு படைப்பாளி கருத்தை
தாண்டிய பார்வைக்கும் இடமளித்து விடுகின்றது. பலநேரங்களில். அதனாலேயே பல புத்தகங்கள்
படைப்பாளி வாழும் காலம் கடந்து பின்னாளில் பிரபலமாகின்றது. பல நேரங்களில் சமூகம் நிராகரிக்கும்
புத்தகங்கள் பிரபலமாவதும், சமூகம் அங்கீகரிக்கும் புத்தகங்கள் மௌனமாய் புரட்சியை நிகழ்த்துவதும்
, புரட்சி நிகழ்ந்த பின்னர் அமைதியாவதும் கண்கூடு.
வாசிப்பு இன்றைக்கு
புத்தககளில் மட்டுமல்லாது கணிணி, கைபேசி, ஐபேட் என்று பல்வேறு தளங்களில் பெருகி வருகின்றது
மகிழ்ச்சி தரக் கூடிய விசயமாகும்.புத்தக கண்காட்சிகள் எழுத்தாளர்களும் வாசகனும் சந்திக்கும்
இடமாக மாறி வருவது வரவேற்புக்குரியது
புத்தகமும் , வாசிப்பும்
எதிர் திசையில் மோதிக் கொள்வதால் சக்தி பெறுகின்றன.அவற்றின் சந்திப்பின் நிகழ்தகவில்
ஒரே மாதிரியாக இல்லாத பல தினுசான சிந்தனைகளுக்கு
சாத்தியமளிக்கின்றன
வாசக மனங்கள் பெருகட்டும்,
புத்தகங்களை அவற்றை சுமப்பதிலிருந்து உணர்வோடு பயணிப்பது சாத்தியமாக்கட்டும்
Post a Comment