சூரியாள்

Monday, June 04, 2012
பொய்கள் குறித்து சில உண்மைகள்

பொய்கள் குறித்து சில உண்மைகள்
இந்த வாரம் நீயா நானா ( 3. 6. 12 அன்று)வில் ஒலிபரப்பான  நிகழ்வு  சில விடயங்களை பேசுவதற்கு ஒரு களத்தை உண்டு பண்ணிக் கொடுக்கின்றது.
பொய் ஏன் சர்வ சாதாரணமான வாழ்வியல் முறையாக மாறிக் கொண்டிருக்கின்றது என்ற கேள்வியோடு தொடங்கியது
கவனிக்கப் படுவதற்காகப் பொய் சொல்லுகின்றோம் என்று தொடங்கி, நிகழ்வில் கவனிக்கப் படுவதற்காகப் படு மோசமான உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். இன்றைய யதார்த்தம் ”கெட்டிக்காரத்தனமா திருடிட்டான்” என்று சொல்லும் போது அதை கேட்கின்றவன் அதை விட கெட்டிக் காரத்தனமாக திருடவே முனைப்பு ஓடும் அப்படியான சிந்தனை தளத்திலேயே மெய் மறந்து பொய்யோடு வாழ்ந்து திரிகின்றோம் சரி இந்த மனோ நிலை எங்கிருந்து தொடங்கியது
இந்த  உலகமே தொழில் வயப் பட்டதாயும் அத்தொழில் ஆண்கள் வயப் பட்டதாகவுமே இருக்க அதற்குள் நுழையும் பெண்களும் அவர்களின் தடத்தில் அவர்களை மிஞ்சுவதற்கே போட்டி போட்ட வண்ணம் இருக்கின்றனர்
ஆண்கள் அவர்களின் தொழிலிலிருந்து தொடங்குகின்றனர், பொய்களை அங்கீகரிக்கும் மனங்களை. தொழிலில் 50 சதவீத உண்மை தேவை அதுவே அடிப்படை என்று சொல்லிக் கொடுக்கும் போதே 50 சதவீத பொய்களை அனுமதிக்கும் வேலையை செய்து விடுகின்றோம்
50 சதவீத உண்மை சொல்லி அதாவது பொய் சொல்லி  வென்று விட்டால் தொடர்ந்து அடுத்த படியை அடைய  இன்னும் அதிகமாக பொய் சொல்லுவது  இயல்பு ஆகிப் போய் விடுகின்ற ஆபத்தைதான் இன்று இந்த நீயா நானா நிகழ்வு பிரதி பலித்தது.
பெண்களிடம் இது எப்படி தனது வேலையை தொடங்கியது. அன்றைய நிகழ்வில் பேசிய எல்லாருமே பெரும்பாலும் சென்னையின் வாழ்வை தனதாக்கிக் கொண்டவர்கள். இவர்கள் வேலை ,  படிப்பு என எப்பவும் சமூகத்தை எதிர்கொள்ள தயாரான நிலையில், ஆண்களை வென்று விடுவதும் ஆண்களிடம் நல்ல பெயர் வாங்குவதும் என  நிர்பந்திக்கப் பட்டவர்கள்.
 எனக்குத் தெரிந்த ஒரு பெண் வெளி நாட்டுக் கம்பெணியில் வேலை செய்யத் தொடங்கிய நிமிடமிருந்து அந்த வேலை போனால் தான் எதுமில்லாதவளாகி விடுவோம் என்று பயப்படத் தொடங்கி விட்டாள் இத்தனைக்கும்   முதுநிலை பட்டதாரி . வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதை விட வேலையை விடாதிருக்க நிபந்தனைகள் விதிக்கத் தொடங்கினாள். வேலை இடமும் அவர்களை அடிமையாக வைத்திருப்பதற்கு அதுவும் அந்தக் காலத்தில் பத்திரங்களில் எழுதுவார்களே குடும்பத் தலைவி என்பதை ”சுக ஜீவனம்” என்று அது போல சுகஜீவனம் என நம்ப வைத்து  அடிமைத் தளையை அவர்களே ஏற்றுக் கொள்ள பணத்தைக் காட்டியும் சம்மதிக்க வைக்கின்றது, எனவே ஆண்களின் உலகை வென்று விட அவர்களை விட உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ள ஆண் உலகு தீர்மானித்த வாழ்வியலை அதை விட ஒரு படி மேலாக செய்ய சித்தமாக இருக்கும் பெண்கள் பொய்களைத் திறமையாக சொல்லவும் கற்றுக் கொண்டு அடுத்த விநாடியிலிருந்து அதை நியாயப் படுத்த, ’உலகம் மாறிவிட்டது’, என்றும் ’இதுவே யதார்த்தம்’  என உரத்தக் கூவி   குற்றவுணர்விலிருந்து தப்பிக்க முயலுபவர்கள்
இந்த இடத்திலிருந்து இதன் பார்வையாளர்களாக நாம் என்ன செய்யப் போகின்றோம்.
பெண்கள்  தங்களின் இதுவரை இருந்த இருப்பு  யாரோடும் ஒப்பிடக் கூடியதல்ல குறிப்பாக ஆண்களோடு. . ஆண்கள் எதை செய்வதை நாங்கள் விரும்பவில்லையோ அதை  பெண்களும் செய்வதை விட்டு விட்டு தன்னிலையிலேயே  அடுத்த படியில்  நடந்து போகப் பார்த்தால் பொய், பொய்யை விட சிறந்த பொய், இன்னும் திறமையான பொய் என்பது மாற வழி வகுக்கும்.
சமீப காலமாக நவீனம் பின் நவீனம் என்பதெல்லாம் தவறுகளுக்கான காரணங்களை  பன்முகப் பார்வை என்ற பெயரில் நியாயப் படுத்தி அதனூடாகவே வாழ்ந்து விட வைக்கப் பார்க்கின்றதை சிந்தனையிலும் செயலிலும் புகுத்தி விட்டது
நான் தீவிர இலக்கிய வாதிகள்  தீவிர வாசிப்பாளர்கள் என்று தன்னை சொல்லிக் கொள்பவர்களோடு பழக நேர்ந்த போது  எனக்கு வாசிக்க அவர்கள் தந்த புத்தகம் ’அன்னியன்’ நாவல்.  அதை வாசித்த போது அதை கடந்து விடவே எனது உள்ளுணர்வு சொல்லிற்று.
பார்க்கப் படுவதற்காக என்னை கிராமத்து பெண் தோற்றத்திலிருந்து மாற்றிக் கொள்ளுகின்றேன். எனபதற்குபதிலாக , எனது திறமையின் வழியாக பார்க்கப் படவைக்க என்னால் முடியும் என்ற நம்பிக்கை யின்மையும்,
 தந்தை இருக்கின்றார் என்று பொய் சொல்லுவது எனக்கு எல்லாரும் இருக்கின்றார்கள் என்று நம்ப வைக்க என்று சொல்லுவதில், தனியாளாக இயங்க முடியாது  சமூகத்தில் என்ற நம்பிக்கையின்மையும்  நம் வாசிப்புக்கு கிடைக்கின்ற உண்மைகள்
 நவீனம் ஏற்கனவே இருந்த பழமையின் கதவுகளைத் திறந்து விட்டது, அதற்கடுத்த நவீனம் கதவுகளை உடைத்து விட்டு இன்னும் கொஞ்சம் சுதந்திரம் இன்னும் அதிகமான இடம் என்று மார் தட்டிக் கொள்கின்றது.
அறம் குறித்த சிந்தனை என்பதை விட  நாம்  நம்மில் நம்பிக்கை கொள்வதும், ஊடகங்கள் சொல்லுகின்ற பிரபலமாகின்ற ஆசையும் , தேடலும் மொத்தத்தில் இருந்து வித்தியாசப் பட்டுக் கொண்டே இருக்கவும் நிர்பந்திக்கின்றது
இன்னுமொரு விசயம் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட வாழ்வு , இயந்திரங்களின் மூலம் மனிதனும் தன் வேலைகளை சுளுவாக்க இயந்திரமாகிப் பார்க்கின்றான்.
அதில்  இன்றைய ப்ளஸ் 2 தேர்வுக்கு  இரண்டு மதிப்பெண் கேள்விக்கு புரிதலை விட கீ வார்த்தைகள்  ஐந்து எழுதினால் போதுமானது என்ற மனோநிலை ,உழைப்பையும் அறச்சிந்தனையும் புறம்தள்ளி பார்க்கப் படுகின்ற தொன்றுக்கான் ஆசையெனும் கம்பியில் நடக்க தொடங்கி விடுகின்றது
வாழ்வு முழுக்க கயிற்றில் நடந்தாக வேண்டிய பதட்டமோடு பொய்களின் வாழ்வு தொடருகின்றது, உண்மையின் சுவை அறிந்து விடாமலேயே கவனிப்பாரற்று கிடக்கிறது
அதை எடுத்து சுவைக்க வாழ்வின் ருசி தெரிந்திருக்க வேண்டும் கயிற்றில் நடந்து அடுத்த முனை போய் கைதட்டல் வாங்கும் ருசி கண்ட நாக்கு  அது சலிக்கும் போது  வாழ்வையும் உண்மையையும் தேடி வரும் 
posted by mathibama.blogspot.com @ 6/04/2012 10:39:00 pm  
1 Comments:
  • At Sunday, December 09, 2012 4:54:00 pm, Blogger sury siva said…


    //உழைப்பையும் அறச்சிந்தனையும் புறம்தள்ளி பார்க்கப் படுகின்ற தொன்றுக்கான் ஆசையெனும் கம்பியில் நடக்க தொடங்கி விடுகின்றது
    வாழ்வு முழுக்க கயிற்றில் நடந்தாக வேண்டிய பதட்டமோடு பொய்களின் வாழ்வு தொடருகின்றது, உண்மையின் சுவை அறிந்து விடாமலேயே கவனிப்பாரற்று கிடக்கிறது.//

    சத்தியமான வார்த்தைகள்.

    சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

    என்று தான் வள்ளுவர் கூறினார்.

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இன்றைய கால கட்டத்தில்,

    சொல்லுக பொய்யைப் பிறிதோர் பொய்ச் சொல்லை
    வெல்லும்பொய் வன்மை அறிந்து

    என்றாய்விடுமோ எனும் அச்சம் துளிர் விடுகின்றது.

    படித்த பெண்களில் யார் யாருக்கு வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இல்லாத பட்சத்தில்
    அவர்க்ள தத்தம் குழந்தைகள் நலனிலே கண்ணும் கருத்துமாய் இருந்து அவர்களை நல்வழிப்படுத்துவதே நன்மை பயக்குமென‌
    நினைக்கிறேன். பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்று அங்குள்ள எதிர்பார்ப்புகளினால், குடும்ப
    சூழ்னிலை அவதிக்குண்டானது மட்டுமன்றி குழந்தைகளையும் சரிவர பாதுகாத்துக்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டிருப்பது
    வெள்ளிடை மலை. இந்தப்பெண்டிர் படும் மன உளைச்சல் விவரிக்க இயலாத ஒன்றாகும்.

    சிறிது காலமாக மன நல மருத்துவர் அலுவலகங்களில் நான் காண்பதெல்லாம் அங்கு வந்து மருத்துவரின் ஆலோசனைகளையும்
    உளைச்சல் தீர்வுக்கு மருந்துகளையும் நாடுபவர்களில் பெண்கள் அதுவும் குறிப்பாக 25 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்டிரின்
    எண்ணிக்கை கணிசமாக உள்ளது. பல் வேறு காரணங்களால் மனதில் ஏற்படும் அதீத உணர்வுகளால் பாதிக்கப்பட்டு உள்ள
    இவர்களின் நிலைமை இரக்கத்தற்குரியது.

    இதற்கெல்லாம் காரணம் நீங்கள் சொல்லும் தேவையற்ற பொய்யான வாழ்வு.
    எடுத்துச்சொல்லிடவும் துணிச்சல் வேண்டும்.

    வலைச்சரம் ஆசிரியர் திருமதி சுசீலா தங்கள் பதிவினைப் பரிந்துரைக்க நான் இங்கு வந்தேன்.

    உங்கள் எழுத்தில் ஒரு கோபம் தெரிகிறது.
    நியாயமானதே.

    சுப்பு தாத்தா.

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates