திலக பாமா – தனித்து
நிற்கும் ஒரு கவிஞர்
வெங்கட்
சாமிநாதன்
திலக
பாமா ஒரு கவிஞர். இதோடு நான் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் சமீபகாலமாக இது
சாத்தியமில்லாது போய்க்கொண்டு இருக்கிறது. நான் கவிஞர் என்று சொல்வதோடு
நிறுத்திக்கொண்டாலும், பெயரைப் பார்த்து பெண் கவிஞர் என்றும் சேர்த்துப் படித்துக்கொண்டு,
அதற்கான இன்றைய தமிழ்ச் சூழலின் அர்த்தங்களையும் தானே தந்து படித்துக்கொள்ளும்
இன்றைய தமிழ் வாசக மனம். பெண் கவிஞர் என்றால் பெண்ணீயக் கவிஞர் என்று படிக்கப்
படும். பெண்ணீயக் கவிஞர் என்றால் அதற்கான குண வரையரைகள் தரப்பட்டு தயாராக உள்ளன. அதற்கான
பெண்ணிய மொழியும் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது, அந்த பெண்ணிய மொழியின் அகராதியை
நான் இங்கு சொல்ல முடியாது. தெரிந்தவர் தெரிந்து கொள்வார்கள். இதெல்லாம் போக, பெண்ணிய கவிதைகளுக்கு இலக்கணம்
வகுக்கும் ஒரு வழிகாட்டியாக தன்னை வரித்துக்கொண்டுள்ள ஒரு பத்திரிகாசிரியர், ”உங்க கவிதையிலே கொஞ்சம் பெண்ணிய மொழியும்
தூவிக்கொண்டாங்க போட்டிரலாம்” என்று தன் பங்குக்கு உதவுவதாகவும் சொல்கிறார்கள்.
இதற்கெல்லாம் ”சம்மதம் இல்லை என் கவிதையில் என் மொழியும் என் பார்வைகளும்
அனுபவங்களும் தான் இருக்கும்”, என்றால், பெண்ணியம் பேசாத பெண் கவிஞர் கவிஞராகவே
அங்கீகரிக்கப்படமாட்டார். சங்கப் பலகையில் இடம் கிடைக்காது தான்.
அப்படித்
தனித்து விடப்பட்டதால் தனித்துக் காண்பவர் திலக பாமா. எனக்குத் தெரிந்து பத்து
வருடங்களுக்கும் மேலாக எழுதிவருகிறார். இது காறும் இவரது கவிதைகள் எட்டு
தொகுப்புக்களில் வெளிவந்துள்ளன. சமீப வருடங்களில் அவர் உரைநடையிலும் நாவல், பிரயாண
இலக்கியம் என்றும் ஒரு சில எழுதியிருக்கிறார்.
இருப்பினும் அவரது பிரதான ஈடுபாடு கவிதைகளில் தான். இவரைக் கவிஞராக
அங்கீகரிக்காத சக பெண்ணிய கவிஞர்களின் பிரக்ஞையிலும் இவர் கவிஞர் தான். அவர்கள் சொல்லும்
எழுத்தும் தான் அதை மறுக்கும்.
பார்க்கப்
போனால் இவர்கள் வரையரை செய்துள்ள பெண்ணிய மொழியும் பெண்ணிய மொழியல்ல.அது சாதாரண
பேச்சு வழக்கில் இல்லாத வடமொழிச் சொற்கள். தமிழிலே உள்ள அந்தக் கொச்சை மொழிக்கு
தாக்கு வலு அதிகம். ஆனால், தமிழிலே
சொல்வதற்கு அவர்களுக்கே கூச்சமாக இருப்பதால் சமஸ்க்ருத வார்த்தைகளை
பயன்படுத்திக்கொள்கிறார்கள். எப்போதோ படித்தது. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
ஆண்டாள் திருப்பாவைக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார்,. அவை அன்றைய சுதேச
மித்திரன் வாரப் பத்திரிகையில் வெளி வந்து கொண்டிருந்தன. அவற்றில் சில
பாடல்களை விட்டு விடுவார். ஏன் என்று கேட்டதற்கு, ”அதிலே என்னென்னமோ வார்த்தைகள்
எல்லாம் வந்திருக்கு. அதை எப்படி சபையிலே பாடமுடியும்?” என்றாராம். “ஏன் அஷ்டபதியெல்லாம்
நீங்க பாடுவேள் தானே? அதைப் பாடறபோது ஆண்டாளைப் பாடறதிலே என்ன கஷ்டம்? என்று
கேட்டார்களாம். அதற்கு அரியக்குடி சொன்ன பதில்.”அஷ்டபதி சமஸ்கிருதத்திலே இருக்கு
ஸ்வாமி, பாடிடலாம். ரொம்பப் பேருக்கு புரியாது. ஆண்டாள் தமிழ்லேன்னா பாடியிருக்கா,
அதான் கஷ்டம்,” என்றாராம். 1940 அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கும் 2000-தில்
வாழும் இன்றைய இளம் பெண்ணிய கவிஞர்களுக்கும் சிந்தனை அலைவரிசை வெட்க அலை வரிசை இரண்டும்
ஒன்றாக இருப்பது வேடிக்கை தான். . . .
பார்க்கப்
போனால் பெண்கள் வதை படுவது இன்று நேற்று
விவகாரமல்ல. ஆண்டவன் கூட மாதொரு பாகன், சரி, உமையொரு பாகன் என்று தான்
சொல்லப் படுகிறானே தவிர ஆணொரு பாகி என்று தேவியாக வனங்கப்படுவதில்லை. சக்தியை ஒரு
பாகமாகக் கொண்ட சிவன் அவன். ஜடாமுடியும்
முறுக்கிய மீசையும் புலித்தோலை
அரைக்கிசைத்த சிவன். அவன். சிவனை ஒரு பாகமாகக் கொண்ட சக்தி அல்லள். கதை அங்கேயே
ஆரம்பித்தாயிற்று. ஆட ஆரம்பித்தாலோ ஒரு காலை மேலே தூக்க, சக்தியோ வெட்கித் தலைகுனிந்து
தன் தோல்வியை ஒப்புக்கொள்ள வைத்து வெற்றி கொண்டதாக மந்தஹாஸம் புரியும் அழுகுணி ஆட்டமும் அப்போதே
தொடங்கியாயிற்று. தெய்வமே கூட ஆண்டவனாகத் தான் கற்பிக்கப் பட்டுள்ளான். தனிமை
வாட்டப் போகிறதே என்று அவனுக்கு ஒரு தேவியை உபரியாகத் தான்
கற்பித்துக்கொண்டிருக்கிறது மனித ஜன்மம். என்னதான் வாதித்தாலும் தேவி உபரி தான்.
உபரிகள் ஒன்றிரண்டு கூடலாம் சில ஆண்டவர்களுக்கு.
ஆக,
அற வாழ்க்கை என்னவென இலக்கணம் வகுக்க வந்த வள்ளுவனும் இதற்கு விதி விலக்கல்லன்.
தொண்டை
ஈரம் உலர
வடக்கயிறு
விட்டு
வருகின்ற வாழ்க்கை
இரண்டடி
தந்த
வள்ளுவன்
காலம் தொட்டு
அன்றீலிருந்து
இன்று வரை
எப்போழுதும்
தாகமொடு
நானிருக்க………..
என்று
நீள்கிறது திலகபாமாவின் கவிதை. ஒன்று.
அந்த
வள்ளுவன்,
தெய்வம்
தொழாள், கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப்
பெய்யும் மழை.
என்று
சொல்லாமல் வேறென்ன சொல்லுவான்? வாசுகிக்கே அந்த கதிதான். கூப்பிட்ட குரலுக்கு
கிணற்று வடக் கயிற்றை பாதி iஇழுத்ததை
“அம்போ” என்று தொங்க விட்டு ஓடி
வரவேண்டும். சிவனும் சரி, வள்ளுவனும் சரி. ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்கள் தாம்.
வள்ளுவர்க்கு சிலை எழுப்பிய நாம் இன்று வேறு எப்படி இருக்க முடியும்?
பெண்ணிய
மொழியின் தேவையே இல்லை. பழகி வரும் மொழியே அதையெல்லாம் சொல்லி விடுகிறது.
நான்
உணர்ந்ததும் உன் பெருமையாக
நீ
உணராதது என் தோல்வியாக
இப்படி
முளைச் ச்லவை செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒரு மரபு பேணப்பட்டுவருகிறது. அப்படி மரபு
பேணுதலில் தான் “பெய் என்றால் மழை பெய்யும்.” அது தொழுநன் தொழுதெழுபவளுக்குத் தான்
அந்த சக்தி உண்டு என்று பூச்சூட்டப்பட்டுள்ளது. இதைச் சொன்ன வள்ளுவனோ தொழுநனோ பெய்
என்றால் மழை பெய்யாது. அப்பா! கூடை நிறைய மல்லிப்பூ சூட்டியாயிற்று.
நீ
விரும்புவதை நான் உணர்ந்து கொள்வது நீ பெருமை பாராட்டிக்கொள்ளும் காரணமாகிறது.
என்னை நீ உணராததோ, உனக்கு உணரவைக்காத என் தோல்வி யாக புரிந்து கொள்ளப் படுகிறது.
ஆக
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் புரிய வைப்பதில் உள்ள மொழிப் பிரசினையாக
வெளிப்பாட்டுப் பிரசினையாக இது முன் வைக்கப்படுகிறது. இதிலும் ஒரு சாமர்த்தியமும்
விளையாடுகிறது.
ஆண்கள்
எல்லாருக்குமே
பெண்களிடம்
ஒளிக்க விஷயமிருக்கிறது.
அவளுக்குப்
புரியாது
அவள்
சாதாரண குடும்பப் பெண்
அவ்ள்
அலுவலகம் தவிர
உலகம்
தெரியாதவள்
அவள் என்னை விட்டுக் கொடுக்கமாட்டாள்
அவள்
என்னைச் சிறை வைப்பவள்
அவளே
ஆண்
அவளோடு
இன்னொரு
ஆண் இருத்தலியலாது.
………………
…………..
உனது
தவறுகளாயில்லாது
எனது
பிழைகளாய்
மொழிபெயர்க்கும்
உன்
முன்னால்
…………..
புரிந்து
கொள்ள முடியாதவள்
என்ற
உன் வாசிப்புக்கு
அப்பாலும்
என்று
நீள்கிறது விலகிக் கொள்ளும் நட்பு என்று ஒரு கவிதை
சொல்லாமலே
புரிந்துகொள்வது பென்ணுக்கு அழகாகக் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது.
சொல்லப்படாமல் புரிந்து கொள்ள வேண்டிய ஆணின் விருப்பங்கள் காலத்துக்குக் காலம்
வேறுபட்டும் விரிவுபட்டும் வரும் நிலையில் புரிதல் என்பது ஒரு பிரசினையாகிப்
போகிறது.
புரிதலின்
வலிமை
என்று ஒரு கவிதை அதன் வரிகள் சில:
எனக்கப்புறமாக
வாசிக்கப்படவேண்டிய
புரிதல்கள்
எழுத்தாகவில்லை
எழுத்தானாலும்
அது
உன்
வாசிப்புக்கான
கவிதையாவதில்லை
புருவ
நெறிப்பின்
வரிகளுக்குள்ளே
புதைந்து
கிடக்கின்றன
இதை
எப்படி எப்படியெல்லாம் தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது?
எவ்வளவு தடவை தான் சொன்னாலும்….
உன்னிடமிருக்கும்
“ஆம்”
என்பதன் பொருள்
என்னிடமிருப்பதில்லை.
உனக்கான
”ஆம்-”-ஐ
நீ
உச்சரித்த போது
எனக்கான
“இல்லை” யாக
மாறிப்
போனதை
உன்
பக்கமிருந்து
எப்பவும்
நீ தெரிந்து கொள்ள
நியாயமில்லை.
இது
ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ளும் பிரசினையுமில்லை. காரணம் காலம் காலமாக
ஒருவர் சொல்லாமல் இருப்பதே சொன்னதாகக் கொள்ளப்படும். மற்றவர் சொல்லாததை சொன்னதாகப்
புரிந்து கொள்ளவேண்டும் என மரபும்
தர்மமும் மூளைச் சலவை செய்துள்ளன
பேசிக்கொண்டிருந்த
பொழுதுகளில்
ஒன்றுமில்லையெனச்
சொல்லிவிட்டு
துண்டித்த
தொடர்புகளின் பின்னால்
எப்பவும்
தொடருகின்றன பேச்சுக்கள்
வெடிப்பு
விழுந்து போன
செம்மண்
பதித்துக்கொள்ள
மறுக்கிறது
புதிய
பாதச் சுவடுகளை.
(அழைப்பு நெருக்கடிகள்)
இப;டி
நிறையவே சொல்லிக்கொண்டு போக வேண்டியிருக்கிறது. இது அன்றாட நிகழ்வுகள், மௌன
உத்தரவுகள் மௌன புரிதல்கள். பேசித் தீர்க்க உள் உறைந்த ஆதிக்க உணர்வுகள் இடம்
கொடுப்பதில்லை. வீட்டுக்குள்ளேயே மௌன யுத்தம்.
நீ
மொன்னையாக்கிப்
போட்ட
வார்த்தைகள்
கிடக்கின்றன
கூட்டித்
தள்ளி விட முடியாதபடிக்கு
அதன்
உடைவின் கூர்மைகள்
அடிக்கடி
பதம் பார்த்து விட
பார்த்து
நடக்கவும்
சரி
வரக் கூட்டவும்
உத்தரவிடும்
உன் அதிகாரத்தில்
மறைகிறது
அவற்றை
உடைசலாக்கியது
நீ
எனும் நிஜம்.
இதை
விட வலிமையாக மனித வரலாறு முழுதும் நீடித்துவரும் ஒரு உறவின் கொடுமையைச் சொல்ல
முடியுமா எனத் தெரியவில்லை.
இவையெல்லாம்
என்னை அதிகம் சிரமப் படுத்தாது காணும் திலக பாமா. இது ஒரு பகுதி. இன்னொரு கணிசமான
பகுதியில் திலகபாமாவின். கவிதை மொழி உருவகங்களாலும் குறியீடுகளாலும் ஆனது. பூடக
மானது. அனேகம் புரிவனதான். ஆனால் சில , என் வாசிப்புக்கு அவை புரிவது போலும் இருக்கும். முழுதும் புரியாதது
போலும் இருக்கும் மொழி கொண்டது. அவரது கவிதைகள் தாம் என்றில்லை நாவலும்
அப்படித்தான். கதைகளும் அப்படித்தான்.
எல்லாருக்கும்
எல்லாம் புரிந்து விடவேண்டும் என்று அவசியம் ஏதுமில்லை. சில கொஞ்சம் யோசித்தால்
புரியும். தான். சில அப்படி யோசித்தாலும்
புரிய மறுக்கும். ஆனால் அவை நம்மைப் படிக்க நிர்ப்பந்திக்கும். அவை இப்போது
புரியாவிட்டாலும் உயிர்ப்புள்ளவை என்பதற்கு அது தான் அடையாளம். கவிஞரைக் கேட்டுப்
பயனில்லை. எழுதி வெளியுலகில் உலவ விட்ட பிறகு, அவற்றுக்கும் வாசகனுக்குமான உறவு
தனி. அதில் எழுதியவர் தலையிட முடியாது. அவரவர் கொள்ளும் அர்த்தம் தான் அதன்
அர்த்தம்.
ராபர்ட்
ப்ரௌனிங் சொன்னதாக ஒரு புகழ் பெற்ற வாசகம் உண்டு. ராபர்ட் ப்ரௌனிங்கிடம் ஒருவர்
அவர் கவிதை ஒன்றிற்கு என்ன பொருள்? என்று கேட்டதற்கு, அவர் சொன்னது “இக்கவிதையை
எழுதிய போது இதன் பொருள் என்னவென்று உலகில் இருவர்க்குத் தான் தெரிந்திருந்தது.
அந்த இருவரில் நான் ஒருவன். மற்றவர் கடவுள். இப்போது கடவுள் ஒருவருக்குத் தான்
இதன் பொருள் தெரியும். என்னைக் கேட்டுப் பயனில்லை”.
சரி
திலகபாமாவுக்கு வருவோம் விதைகள், மண், ஈரம், பூக்கள், வேர் என உருவகங்கள் கொண்டது
அவர் கவிதை மொழி
உன்
மொட்டை மாடியில்
தொட்டிச்
செடியாவதற்கென்று
அந்தி
மந்தாரை விதைகளை
அனுப்பி
வைக்கின்றேன்.
நாளெல்லாம்
நீரூற்றியும்
முளைக்காத
விதை
ஒரு
நாள் அவன்
வீடில்லா
போழ்தினில்
விழுந்த
மழைச் சாரலில்
நனைந்த
மறுநாள்
அரும்பு
விட்டதாம்
இன்னொன்று:
மலையும்
பள்ளத்துக்குமிடையில்
வீழுகின்ற
அருவியாய்
எனக்கும்
உனக்குமிடையில்
வாழ்க்கை
வீழ்ந்தபடியே
வாழ்கின்றது.
இவையெல்லாம்,
கரையாத உப்புப் பெண் என்னும் எட்டாம் தொகுப்பிலிருந்து. முதல் தொகுப்பைப்
பார்க்கலாமா? எந்த கவிதையையும் அதன் முழுமையில் நான் தரவேண்டியதில்லை.
ஒரு
சில மாதிரிக்கென்று. பூடகமானவை தான். புரியாமலா இருக்கும்?
ஊரெங்கும்
நெருப்புக் கோழிகள்
மண்ணுள்
புதைந்து புதைந்து
கழுத்து
நீண்டு போகும்
நெருப்புக்
கோழிகள்.
பாரங்களின்
சுகம் என்ற
கவிதையிலிருந்து,
கனத்துக்
கிடந்த தனிமை
நீ
பேசிய நிமிடங்களை விட
அளவுக்கதிகமான
நினைவுகளோடு
தொணதொணக்கும்.
…………
…….
தலைக்கடியில்
தானென்றாலும்,
பாரமாகும்
தலையணைகள்
நெருடல்களாவது
தவிர்க்க
கட்டாந்தரையில்
கால்கள்
பதிக்கும்
தலைகள்.
(இதில்
அளவுக்கதிகமான என்ற சொல் கொஞ்சம் அதிகமே நீட்டப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது.
“அதிக” என்றாலே போதும் என்று தோன்றுகிறது.
இன்னும்
ஒன்றே ஒன்று. நிஜங்களின் நிழல்கள்-
லிருந்து
விதை
ஓடு தெறிக்க,
வெளிவந்த
நாற்று
மண்ணுக்குள்
வேராகத் தனைத்
திணிக்க
மனமில்லாது
விடுத்த
இலையைச் சிறகாக்கி,
நட்சத்திரக்
கனவு காண
நினைவை
மண்ணிட்டு
பின்
மண்ணோடு பெயர்த்தெடுத்து
இடம்
மாற்றி திசை மாற்றி இன்று மண்ணும் நானும்
இரண்டாக்க
முடியாததாய் ……
என்று
தொடங்கும் இந்நீண்ட கவிதை இப்படி முடிகிறது.
பறக்க
ஆசைப்பட்ட மரம்
பூக்களின்
கனிகளின் பாரங்களோடு
மண்ணோடு
வாழும்
வாழ்வெது
எனும் கேள்வி தாங்கி.
இனி
எனக்குப் புரியாத உருவகத்தை உதாரணிக்க வேண்டாமா?”
அது
இத்தொகுப்பின் தலைப்புக் கவிதை தான். கரையாத உப்புப் பெண்
கரையாள்
என நம்பிய
உப்புப்
பெண்ணாய்
அவள்
உன்னருகில் வந்த போதும்
படித்திருந்த
கிளியின்
இன்னுமொரு
ரூபமென அறியாய்.
எட்டுத்தொகுதிகள்.
இவையெல்லாம் பெண்ணின் சுதந்திர இருப்பைத் தன் தனித்த குரலாய் பதிவு செய்பவை.
கூட்டுக் குரல் அல்ல. கோஷங்கள் அல்ல. தனித்து ஒலிக்கும் குரலானாலும் பெண் இனம்
அனைத்துக்குமான குரல். தன் பெண்மையை அதன் நளினத்தை, அழகை பென்ணியம் என்று சொல்லி
மறுத்துக்கொள்ளாத குரல். பரந்து விரிந்து கிடக்கும் இயறகை அனைத்திலும், பூக்களில்
விதைகளில், மரங்களில், இலைகளில், மண்ணில், காற்றில் தன்னைக் காணும் குரல்.
கரையாத
உப்புப் பெண்:
(கவிதைத் தொகுப்பு) திலக பாமா
வெளியீடு:
காவ்யா, 16 இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம்
சென்னை -24 ப். 156 ரூ 120
Post a Comment