கல்கி இது எனது நான்காவது இலங்கை பயணம். போன முறை நான் சென்ற போது காவல் கட்டுப் பாடுகள் எல்லாம் நகர விடாமல் செய்திருந்ததின் இறுக்கத்தையும் அனுபவித்தவள். இன்றோ போர் முடிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டு விட்ட நிலையில், எங்கு வேண்டுமானாலும் எளிதாக போகலாம் என்ற நிலையில்தான் எங்கள் பயனமும் கூட்டமும் திட்டமிடப் பட்டிருந்தது. தொடர்ந்து ஒரு வார என் கவனிப்பில் சில உண்மைகள் உறைத்தன. நான் சந்தித்த நபர்கள் அல்லது சந்திக்க இருந்த நபர்கள் எல்லாருமே ஒரே போல் சந்தித்த ஒவ்வொரு நொடியும் செய்ய முடியாமைக்கான வரமுடியாமைக்கான என்று இயலாமைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போனார்கள். பக்கத்து வீட்டு தெரிந்த பெண் என்று வந்தவர் கூட இன்று இவ்வளவு வேலை செய்தேன் ஆனாலும் திருப்தியில்லை என்று ஒரு சலிப்போடு சொல்லிக் கொண்டே போனார். உண்மையில் ஒன்றுமில்லாத வேலைகளை மிகப் பெரிதாக்கி பூதக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே போனார். வீட்டில 3 வேளையாட்கள் ஆனால் என்ன செய்யுறாங்கன்னு போன்ல கேட்டுக்கிடே இருக்க வேண்டியிருக்கு என்று அந்த அம்மாள் அலுத்துக் கொண்ட போது சிரிப்புதான் வந்தது. அதே போல் கூட்டங்களிலும் சந்திக்கின்ற நபர்கள் நீங்கள் கொழும்புவிலேயே தங்கி விடக் கூடாது என்று சொல்வதும் கூடவே உங்களை எங்கள் ஊருக்கு அழைக்க முடியாமைக்கு காரணங்களைச் சொல்லுவதும் எனக்கு நிறைய தரிசனங்களைத் தந்தது. இரண்டு விசயங்கள் ஒன்று போரால் உறைந்து போய் இருக்கின்றார்கள்,அதுவே சுகமானதாக பழகி விட்டதோ என்ற ஐயம் இரண்டு, எல்லாவற்றையும் பூதக் கண்ணாடியில் பார்த்துத் தொலைப்பது
போரால் தொடர்ந்து உறைந்து போய் விட்டவர்கள் இவர்கள் . இன்று போர் நின்ற பின்னும் உறைதலான பாவைனையிலேயே வாழ்க்கையை கழிக்கப் பார்க்கின்றார்களோ என்று ஐயம் எழுகின்றது. இதைச் சொன்னால் உடனே உங்களுக்கென்ன தெரியும் நாங்கள் அனுபவித்ததை நீங்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள் என வாக்குவாதம் தொடங்குகின்றது. பாதிக்கப் பட்டவர்கள் என்ற கரிசணைக்கு அப்பால் நாமும் விவாதங்களை கை விடுகின்றோம் எனைப் பொறுத்தவரை இது ஆபத்தான சூழல் கழிவிரக்கத்தை கோருகின்ற இந்த உரையாடல்கள் பிரச்சனைகள் தீர அனுமதிக்காது. நிர்தட்சண்யமாய் இதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டேன். புலம்பெயர் வாழ்வு என்ற வாசகம் இலங்கை தமிழரின் சிதறலில் இருந்து தான் தொடங்கியது ஆனால் இன்று அது இந்த( இலங்கை) தேசத்துக்கு மட்டுமானதல்ல எல்லா சூழல்களிலும் அடையாளத்தை கலாசாரத்தை வாழ்வியலை இழந்து புலம் பெயர்வது என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது போரால் நிகழ்ந்த இழப்பு கண்ணுக்கு தெரிகின்றது சில இழப்புகள் உணர்வுகளாக மட்டுமே இருக்கின்றன இவ்வளவு காலம் போர் எங்களை எங்கள் வாழ்வியலை உறைய வைத்திருக்கலாம் அதுவே வாழ்க்கையாக நாமும் பழகியும் விட்டிருக்கலாம் சலிப்புதனை விட்டு விட்டு நம்பிக்கைக்கான புள்ளிகளை தேடத் தொடங்குகின்ற காலம் இது. இன்னமும் சொல்லப் போனால் இன்னுமொரு போர் வரும் என்று ஒரு வித நம்பிக்கை கூட சிலர் வாய்மொழியாக கேட்க முடிந்தது வருத்தமே. கழிவிரக்கத்தை தொடர்ந்து வைத்திருக்க ஆழ்மனசு ஆசைப் படுகின்றதோ. இது ஒரு நோய்க் கூறு சாமான்யனின் வாழ்வு என்பது இல்லாமல் எப்பவும் போரை எதிர்கொண்டு வாழுகின்ற வாழ்க்கை பழகிப்போன நபர்கள் சூழல் அப்படியே இருக்க அவர்களே அறியாமல் விரும்புவது அவர்களின் உறைதலுக்கான சான்று. இன்றைய அறிவுத் தளங்களில் இயங்குபர்களின் முக்கிய வேலை பொதுவாக கண்ணுக்குத் தெரிகின்ற பாதிப்புகளை நீக்க அதிலிருந்து மீள வேலை செய்யத் தொடங்கி விடுவோம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத இந்த மாதிரியான உறைதலிலிருந்து மக்களை வெளி நகட்டுவது இயங்க வைப்பது முக்கியப் பணி. இரண்டாவது இந்திய தமிழரை தொழில் நிமித்தமாஅக அங்கு வாழ்ந்து வரும் நபர்கள் உற்சாகமாக இருக்கின்றார்கள் அவர்கள் எந்த சூழலிலும் தங்கள் வாழ்வியலை தொலைக்க விரும்பாமல் இருக்கின்றார்கள். இப்பொழுது கிடைத்திருக்கின்ற அமைதியில் நிறைய உழைக்கின்றார்கள். அவர்களிடம் இருக்கின்ற நேர்மறையான எண்ணம் இலங்கை வாழ் தமிழர்களிடம் குறைவாக இருக்கின்றதோ என்று கேள்வி மனதில் ஓடியது. இன்னொரு ஆபத்தான விசயம் கடந்த போர்ச்சூழல் தந்து விட்டுப் போன ஒன்று சேவை எல்லாம் ஒவ்வொருவருடைய தொழிலாக மாற்றப் பட்டிருக்கும் விடயம். அமைதிக்காக , மனித நேயத்திற்கான உரிமைகளுக்கான இந்த மாதிரி சேவைகள் முன்பெல்லாம் எங்கள் தொழில் நேரம் போக மனமுவந்து செய்வதாக அமைந்திருந்தது ஆனால். போர்ச்சூழல் வேலைத் தளங்களை எல்லாம் அழித்து விட இப்பொழுது நிறைய இடங்களில் அதுவே முழு நேர தொழிலாகி வாழ்வாகிப் போய் விடுகின்றது. அமைதிக்காக சேவை புரிபவர்கள் அமைதி என்பது வந்து விட்டால் தங்கள் வேலை போய் விடும் என்று பயப்பட ஆரம்பித்து விட்டால் என்னாகும். வேலை செய்வதால் பார்க்கப் படுதல் நிகழ வேண்டும். பார்க்கப் படுதலுக்காக வேலை செய்தல் என்பது போலி தேவையையும் உற்பத்தி இல்லா உழைப்பாகவும் மாறிப் போய் விடும் ஏன் தமிழகத்திலும் கூட அந்த நிலை வருவதை தவிர்க்க முடியவில்லை. இங்கும் தற்பொழுது சேவைகள் தொழிலாகி வருகின்றன. பெருகின்ற என் ஜி ஓக்கள் இடமிருந்து கவனமாக அதன் நுண்ணரசியலை அவதானிக்க வேண்டியிருக்கின்றது. அது நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்தும் வேலைகளைச் செய்து விடுகின்றது இன்னொரு சுவாரசியமான விசயம் திருமண பத்திரிக்கைகள் பற்றிய பேச்சு வந்தது. எல்லா திருமண பத்திரிக்கைகளையும் கீழே போட முடியாத சங்கடம் இருக்கின்றது என்றார்கள், ஏன் என்றேன் எல்லாவற்றிலும் அழகான பிள்ளையார் படமோ கடவுளின் படமோ இருக்கின்றது . கீழே போட முடியாது கடவுளர்களை வெட்டி பத்திரப் படுத்த வேண்டியிருக்கின்றது விட்டு அலமாரி நிறைய சுவாமி படங்கள் என்றார். கல்யாண பத்திரிக்கையில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. திருமணம் முடிந்ததும் தூக்கிஎறிந்து விடுகின்ற மனோ நிலையில் இருக்கின்ற எனக்கு தீர்வு சொல்ல முடியவில்லை.சாதாரண விசயத்தைக் கூட பிரச்சனையாக்கி யோசிக்கின்ற மனோ பாவமோ….. அடுத்த உரையாடலுக்கு மாறிக் கொண்டேன் பதில் சொல்ல முடியாததால் பா. வெங்கடேசன் சொன்ன ஒரு அவதானிப்பும் முக்கியமானது என்று நம்புகின்றேன்” இலங்கைத் தமிழர்கள் எப்பவும் எங்கள் தாயகம் தமிழ்நாடு இந்தியா என்ற மனோ பாவம் ஓடுகின்றது . இது சரியானதுதானா? என்ற கேள்வி எழுப்பினார். எனது தாயகம் இந்தியா என்ற உங்களது மனோ பாவம் வெளிப்படுமானால் இலங்கை வாழ் மக்களுக்கு அது அச்சுறுத்தலாகவே அமையும். அதை தவிர்ப்பது நல்லுறவுக்கு காரணமாக இருக்குமே என்ற விவாதங்கள் இந்த சந்திப்புகள் விளைவித்த நல்ல விசயம்
|
Post a Comment