மறுநாள் காலை மவுண்ட் அபு செல்ல திட்டமிடுகின்றோம், காலை 6 மணிக்கு புறப்படுகின்றோம்.
மீண்டும் யாத்திரிகளின் கூடாரங்கள் ஈர்க்கின்றன. இறங்கி காலை சாப்பாடு அவர்களோடு சாப்பிடலாமா என்கின்றேன். இல்லை. அதற்கு நீங்கள் யாத்திரிகளாய் இருந்தே ஆக வேண்டும் வண்டியில் கொடி கட்டியிருக்க வேண்டும் என்று காரோட்டி சொல்ல கடந்து போகின்றோம். சின்னச்சின்ன பசுமையான குன்றுகளை கடந்து போகின்ற போது ஆதிவாசிகளின் கதைகளால் நம்மை மிரட்டுகின்றார். அந்த மிரட்டல் கதைகள் நம்மை வேகமாக உதய்பூர் திரும்ப வைப்பதற்காக முயற்சிகள் என்று புரிந்து கொண்டாலும் புரியாதது போலவே நகன்று கொண்டிருக்கின்றேன்.
பசுமைக் குன்றுகள் குடையப்பட்டு சாலைகள் நம்மை அழைத்துக் கொண்டு செல்கின்றன. மவுண்ட் அபு உலக அமைதிக்கான இடமாய் அறியப்படுகின்றது. பிரம்மக்குமாரிகள் அமைப்புகள் எல்லா இடங்களிலும் ஆக்கிரமித்திருக்கின்றன.
இயற்கை, சுகமான சீதோட்சன நிலை, புளிக்கும் மாங்காய் தின்று கொண்டே தொலைந்து போகக் கூடிய நடை. அந்த மலையில் கால வரலாற்றைச் சொல்லும் பாதைகள் நிறைந்த இடம். அந்த இடத்தை தேனிலவு முனை என்கின்றார்கள்.
எல்லாம் அனுபவித்து விட்டு திரும்புகின்றேன் உதய்பூருக்கு. திரும்புகின்ற வழியெங்கும் மீண்டும் பாபா ராம் தேவின் பக்தர்கள். ஒரு இடத்தை நெருங்கையில் பெருங் கூட்டம் சுற்றி ஒரு மலைக்குன்றை பார்வையாளர்கள் மேடையாக்கி நடுவில் ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. “காளிநாட்டியம்” என்றார்கள், போய் நானும் கூட்டத்தில் அமர்ந்தேன். அம்மன் முகத்தை நெஞ்சில் கட்டிக் கொண்டு ஒருவர் இருந்தார். அவரைச் சூழ்ந்து பல கிராமவாசிகள் சாம்பிராணி புகை போட்டபடி, மயிலிறகுகளை கைகளில் வைத்தபடி அமர்ந்திருந்தனர். ராசா வேசம் போட்ட ஒருவன் கூலிங்கிளாசும் புராண அரச உடையும் போட்டு இரு மனைவிகள் சூழ வலம் வருகின்றான் கூட்டத்தினரை. ராணி வேசமிட்டிருந்ததும் ஆண்களே. சலைங்கையிட்டு கூட்டததைச் சுற்றி வர ராணிகள் பயந்து ஓட கொள்ளைக் கூட்டம் அரசனை விரட்டுகிறது. சுழன்று சுழன்று அரசனும் கொள்ளைக் கூட்டமும் (அதிலும் இருவர் தான்) கத்தியும், கூச்சலும் வேகமுமாக சுற்றி வருகின்றனர். இரும்புச் சங்கிலிகள் கொண்ட கொத்து ஒன்று அங்கே கிடக்கிறது. ஆடும் சிலர் ஓடி வந்து அதை எடுத்து தங்களைத் தாங்களே அடித்துக் கொண்டு திரும்புகின்றனர்.
நானும் கூட்டத்தினரோடு எழுந்து அரசன் வேசம் கட்டியவரிடம் சாம்பல் வாங்கிக் கொண்டு திரும்புகின்றேன். அவசியம் எங்களோடு சாப்பிட்டு போக வேண்டும் என்று அழைக்கின்றனர். கருப்பட்டி போட்டு ஒரு இனிப்பு வழங்கப் படுகின்றது. அதிக நகைகள் போட்டிருந்த தலைவர் ஒருவர் எங்களைக் கவனித்துக் கொள்கின்றனர். இசையுடன் நான்கைந்து ஆண்கள் ஆடும் உற்சாக நடனத்தை கண்டு ரசித்து விட்டு திரும்புகின்றேன்.
காரோட்டியிடம் கிடைக்காது கிடைக்காது என்றாயே கிடைத்து விட்டது பார்த்தாயா என்று கேட்டு விட்டு அவர்கள் கூடாரத்தில் சாப்பிட்டுவிட்ட திருப்தியில் திரும்பினேன் உதய்பூர்.
|
Post a Comment