சூரியாள்

Wednesday, September 13, 2006
லண்டன் தீபம் தொலைக் காட்சியில் வெளி வந்த நேர்காணல்

லண்டன் தீ தீபம் தொலைக் காட்சியில் வந்த நேர்காணல்

ஒரு கவிஞராக மற்றும் சிறுகதை எழுத்தாளராக இன்னும் ஒரு பெண்ணிலைவாத தொடர்பான அக்கறை கொண்ட எழுத்தாளராக இருக்கின்ற நீங்கள் தமிழகத்திலே இப்பொழுது பெண்ணிலைவாத தொடர்பான தற்கால நிலவரங்கள் எவ்வாறாக இருக்கின்றன?.
திலகபாமா :~இன்று மட்டுமல்ல எப்பொழுதும் இரண்டு விதமான போக்குகள் எல்லா போராட்ட வாழ்விலும் இருந்துகொண்டே இருக்கின்றன ஒன்று மிதவாத போக்கும் மற்றொன்று ஆகத் தீவிரவாத போக்கும் . எனக்குப் படுகின்றது இந்த மிதவாதப் போக்கு மீண்டும் மீண்டும் ஒரு புலம்பல்களையே அல்லது இயறகையியலையே, அதாவது இருக்கின்ற விசயங்களை அப்படியே சொல்லிப் போகிற மாதிரி இருக்கின்றன. ஆகத் தீவிரமான போக்கு எதார்த்த வாழ்க்கைக்கு பொறுத்தமில்லாத சில விசயங்களை சொல்லி கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டுக்குள்ளேயும் போகின்றதில் எனக்கு விருப்பமில்லை. இந்த இரண்டுக்குமிடையில் இன்று என்ன தேவையாக இருக்கின்றது மண் சார்ந்து என்ன தேவையாக இருக்கின்றது என்பதை அன்று அன்று பிரச்சனைகளிலிருந்து தீர்மானிக்க வேண்டியதாக இருக்கின்றது கோட்பாடுரீதியாக புத்தகங்களில் படிப்பதை வைத்து நிறுவாமல் எங்களூடைய வாழ்க்கை என்ன சொல்லிச் செல்கின்றதோ அந்த இடத்தில் இருந்து தான் எங்களுடைய பாதையை தொடங்கணும் என்பதில் தான் நான் இருந்து கொண்டு இருக்கின்றேன்

தமிழகத்தில் பெண்ணிய எழுத்துக்கள் இப்பொழுது காட்டி வரும் முனைப்பு அல்லது இப்பொழுது காட்டி வரும் விருத்தி மிகவும் நீங்கள் சொன்னது போல மித வாதம் தீவிரவாதம் என்கின்ற இரண்டு வகைக்கு உட்பட்டு சிக்கலான நிலையில் தான் இருக்கின்றது இந்த நிலையில் சில கவிஞர்களை மட்டும் உலகம் முழுவதும் அறியக் கிடைக்கின்றது ஏன் மீனாட்சி, வைகை செல்வி பத்மாவதி தாயுமானவன் ரெங்கநாயகி போன்ற கவிஞர்களை உலகம் அறியக் கிடைக்காமல் இருந்துகொண்டேயிருக்கின்றது என்ற கேள்வி எனக்குள் இருக்கின்றது.?

தமிழகத்தில் பெண்கள் எங்களுடைய வாழ்க்கை சூழலில் இருந்து தான் எழுத வருகின்றார்கள் சில ஆண்கள் அல்லது சில இலக்கிய பத்திரிக்கைக்கு அவர்கள் தீர்மானிக்கின்ற போக்குக்கு ஒப்புக் கொடுத்தால் நாங்கள் உலகம் முழுவதும் அறியக் கூடிய சூழல் நிலவி வருகின்றது . நான் பொதுவாக சொல்வது பெண் விடுதலை எது வாக இருக்கும் என்ற கேள்வி வைக்கப் போனால் என் முன்னால் இருக்கும் இந்த சமூகமோ ஆணோ நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் செய்கின்ற போது தான் நான் அதுவாக இல்லாமல் இருக்கின்றதைத்தான் விடுதலையாக உணர்கின்றேன் அந்த என் கோட்பாடுகளை பார்க்கின்ற போது பத்திரிக்கையோ இல்லை என் முன்னால் இருந்த இலக்கிய வாதிகளோ ஒரு பெண்ணியம் என்பது இப்படி என்ற வரையரைக்குள் எங்களை சிக்க வைக்கும் போது சில பெண்கள் அந்த வறையரைக்குள் சிக்காமல் போவது நேருகின்றது அப்படி நேருகின்ற பெண்கள் காணாமல் போகின்றார்கள் என்பது தான் எனக்குப் படுகின்றது.

உண்மையைல் கிராமத்தில் இருந்து வீறாப்போடு எழுதுகின்ற எழுத்துக்கள் ஒரு பத்திரிக்கையில் பிரசுரம் ஆகிவிட்டால் அவர்கள் அந்த பத்திரிக்கையை அதன் கோட்பாடுகளை தங்களூக்குள்ளே உள் வாங்கி விடுகின்றார்கள் என்பது ஒரு தவிர்க்க முடியாமல் அவர்களுக்குள்ளே அந்த கோட்பாடுகள் விழுங்கப் பட்டு விடுகின்றது. ஆகவே எப்படி இவ்வளவு தனித்துவமாக நின்று உங்களால் இயங்க முடிகின்றது.

எங்களுடைய வாழ்கை சூழல் தானிதற்கு முக்கிய காரணம் என்று நம்புகின்றேன். நான் ஒரு மருத்துவமனை நிர்வாகத்தோட தொடர்புடையதால் தினந்தோறும் மக்களுடைய பிரச்சனைகளை சந்திக்க கூடியவளாக இருக்கின்றேன் நேற்று தீர்மானித்த விசயம் இன்று இல்லாமல் போகின்றது எனக்கு சரி என்று பட்ட
விசயம் இன்னொருத்தருக்கு பொருத்தமில்லாது போகின்றது ஆக ஒரு நாள் இருக்கின்ற மாதிரி இன்னொரு நாள் இருக்க முடியாது என்ற முரண்பாடுகளுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் இந்த முரண் பாடுகளை சரியாக புரிந்துகொண்டு பொதுவாக பெண்களுக்கு நேருகின்ற சிக்கல் எது என்பதை நான் பார்க்கின்றேன் என்றால் ஒரு பெட்டிக்குள் வளரக் கூடியதாகவே பெண்கள்
சமூகத்தால் வடிவமைக்கப் பட்டிருக்கின்றார்கள். இதை உடைத்துக் கொண்டு வெளி வருகின்ற பெண் எங்கே போய் விழுவது என்று தெரியமல் ஏதாவது ஒரு பிரயோசனமும் இல்லாத இடத்தில் விழக் கூடிய சூழல் நேர்ந்து விடுகின்றது பெண்ணுக்கு தான் செய்கின்ற ஒவ்வொன்றும் எதை கட்டமைக்கின்ற போகின்றது என்பதை தீவிரமாக யோசித்து , தேவையில்லாத கட்டுகளை உடைத்துக் கொண்டு வரும் போது நாங்கள் எங்கு போய் நிற்கணும் அப்போ அதை நோக்கித்தான் நான் ஒவ்வொரு அடியும் வைக்கணும்னு தீர்மானிக்கனும் அதேநேரம் நாங்கள் செய்வது வெற்றியாக நிறுவப் பட வேணும். ஆனால் பல பெண்களுக்கு நிறுவப் படக் கூடிய சூழல் வாய்க்காமல் போகின்றது அது மிகப் பெரிய துரதிர்ஷ்டம் தான்.அப்படியான சந்தர்ப்பங்கள் வாய்த்ததுவே எனக்கான தனித்துவம் அமைய காரணமாய் இருந்தது.
2
பெண்ணிலை வாத தொடர்பான கருத்துக்கள் அல்லது விசயங்கள் நகர்புறங்களோடு மட்டும் மட்டுப் படுத்தப் பட்டு ஒரு கூட்டத்திற்குள்ளேயே மட்டுப் படுத்தப் படுகின்றது திடீரெண்று பெண்ணியம் தொடர்பான கருத்துக்கள் ஒரு பெண்ணை கூப்பிட்டு பென்ணியம் தொடர்பான கருத்துக்களை வரவேற்கின்றோம் ஆகவே உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்கள் என்றால் மிகத் தெளிவாக வைக்க முடியாமல் போகின்றது. நான் சொல்லக் கூடிய விசயம் என்ன வென்றால் நகர்புறத்திலிருந்து பெண்கள் தொடர்பான விசயங்களை அபிவிருத்தி முன்னேற்றங்களை கிராமப் புறத்திற்கு கடத்துவது என்ற வேலைத் திட்டங்களில் நீங்கள் ஏதாவது ஈடுபட்டீர்களா அல்லது அப்படியான வேலைத்திட்டங்கள் நடைபெறுகிறதா?

ஒரு உண்மையை ஒத்துக்கொள்ள வேணும் ஒரு கவிஞராக இருப்பதாலேயே அல்லது பெண்ணியம் பேசுவதாலேயே நாங்கள் மிகப் பெரிய சமூகப் பணி செய்துவருகின்றோம் என்று சொல்வது மிகப் பெரிய பொய்யாகத்தான் இருக்க முடியும் வாழ்க்கையில் எனக்குச் சில சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றது சிவகாசியில் நிறைய பட்டாசுத் தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் இருக்கின்றார்கள் அவர்களுடனும், கல்லூரிகளுடனும் நான் தொடர்பு கொண்டு மனம் விட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருப்போம் ஆனால் அவர்களுடன் பெண்நிலை கோட்பாடுகள் பற்றி எதையும் பேச முடியாது இன்றைக்கு ஆகப் பெரிசாக சிறு பத்திரிக்கைகள் உங்கள் முன்னால் சமர்ப்பித்திருக்கின்ற பெண்நிலைவாதமோ பெண் எழுத்தாளர்கள் பேசக் கூடிய விசயம் எதையுமே அவர்களிடம் பேச முடியாது அவர்களை கேட்டால். நாங்கள் சுகமாகத்தானே இருக்கின்றோம் என்பார்கள் தாங்கள் யார் என உணராமல் இருக்கின்றார்கள் அவர்கள் வாழ்க்கையில் இருந்து மீண்டும் மீண்டும் பேச வேண்டும் நான் 18, 19 வயதுமதிக்கத் தக்க பெண்ணைச் சந்தித்தேன் அவளுக்கு திருமணமாகி 4 மாதங்கள் ஆகின்றன அவள் கருவுற்றிருக்கிறாள் அந்த சமயத்தில் அவள் கணவன் ஒரு விபத்தில் இறந்து விடுகின்றான் அவள் குடும்பத்தில் அவளுக்கு நல்லது செய்வதாக நினைத்து அவளுக்கு கருச்சிதைவு செய்து விடுகின்றார்கள் அவள் அந்த இழப்பில் கருவுற்ற சந்தோசத்தை உணர முடியாது கணவனை இழந்த இழப்பை உணர முடியாது இருக்கின்ற அவளது சூழல் தான் என்ன? அவள் சிதைவுற்றுப் போய் இருக்கின்றாள் அவளை எதுவுமே உணர விடாத சூழல் பற்றி பிரச்சனையாக எடுக்கலை அவளுக்கு நாங்கள் நல்லது செய்து விட்டோம் , முடிஞ்சு போச்சி,அவளுடைய நல்ல வாழ்க்கைக்கு தயார் செய்து விட்டோம். ஆக நல்ல வாழ்க்கைக்கு என என்ன இழக்க வேண்டியதாக இருக்கின்றது என்ற கேள்வி வைக்கப் போனால் நிறையப் பேச வேண்டி இருக்கின்றது . ஒவ்வொரு படிக்கட்டும் ஒவ்வொரு செங்கல் கல்லாக மறு பரிசீலனை செய்ய வேண்டியதாய் இருக்கு. அப்படி எல்லாப் பெண்கள் கிட்டேயும் போகின்றேன் . தொழிற்சாலைகளில் ,கல்லூரிகளில் வேலை செய்கின்ற பெண்கள். அவர்களுடைய சிந்தை மாற்றம் மூலம் தான் நாங்கள் சொல்கின்ற விசயம் பதிவு செய்ய வேண்டி இருக்கு.

அத்தோடு ஒரு முக்கியமான பிரச்சனை தமிழ்நாட்டிலும் தான் இலங்கையிலும் தான் ஆனால் இலங்கையில் பெண்ணிலைவாத தொடர்பான பேச்சுக்கள் வரும் போது இது தவிர்க்கப் படுகின்றது ஏன் இந்த கட்டத்துக்கு அந்த பேச்சுக்கள் போவதில்லை என்கின்ற ஒரு பிரச்சனை இருக்கிறது. தலித் பெண்களூடைய பிரச்சனை. சில தலித் எழுத்தாளர்கள் தாங்கள் தான் தலித் பிரச்சனைகளை தூக்கி நிறுத்துகின்றோம் என்று சொல்லிக் கொண்டு அவர்களூடைய வாழ்க்கை தொடர்பான சில விசயங்களை மட்டும் எழுதி விட்டால், ஏனையவர்கள் நெருங்க முடியாத படிக்கு அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் ஒரு குறுக்குச் சுவர் விழுந்து இருக்கின்றது ஆகவே தலித் பெண்கள் மத்தியிலே உள்ள ஒரு வீறாப்பு அல்லது விசயங்களை தெரிந்து கொள்வது அல்லது அவர்களுடைய உரிமைகளை கூட்டுதல் எவ்வாறு இருக்கிறது.

தலித்துகள் தான் தலித் பிரச்சனைகளைப் பேசமுடியும் பெண்கள் தான் பெண்கள் பிரச்சனைகளைப் பேச முடியும் என்ற நம்பிக்கையில்லை எனக்கு

அதே போல் தலித்துகளிடம் அவர்களது பிரச்சனைகளிடம் நாங்கள் நெருங்க முடியாது என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடில்லை நான் தலித் பிரச்சனைகளை பெண் பிரச்சனைகளை ஒரு மனிதன் ஒடுக்கப் படுக்கின்றான் என்றுதான் பார்க்கின்றேன் அவனது மனித இருப்பை காப்பாற்றிக் கொள்ள உணர வைக்க நாங்களும் உதவுகின்றோம் அல்லது தோள் கொடுக்க வேண்டும். எனக்கு தலித்தியம், பெண்ணியம் என்பது மீண்டும் இலக்கியத்தில் ஒரு கோட்பாட்டை உருவாக்கி சிந்தனை வாயிலாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது இந்த கோட்பாடுகளை வடிவமைக்கு போதும் இந்த பிரித்தல்களை வடிவமைக்க வேண்டுமா? அப்போ இந்த மனிதர்களுடைய பிரச்சனைகளை பேச அவனைப் பொதுமைக்குள் வராமல் இருத்த வைக்க தலித்தியம் எனும் வார்த்தை உதவுகின்றதோ மீண்டும் அவனை அதுவாக அதுக்குள்ளே இருக்க வைக்க இந்த தலித்தியம் பார்க்கின்றதோ எனும் அச்சப் பாடு எனக்குள் இருக்கின்றது

3
உங்களுடைய 5 கவிதை தொகுப்புகள் வெளியாகி உள்ள இந்த வேலையில் பலவிதமான கருத்துக்கள் பலவிதமான முக்கியத்துவத்தை காணக் கூடிய தாக இருக்கின்றது எழுதுகின்ற கவிதைகள் அந்த அந்த மக்களிடையே போய் சேரவில்லை என்ற குறைபாடு எனக்குள் இருக்கின்றது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் அதனுடைய விஸ்தீரனம் செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்களா?

எனக்கு கலைகளில் நாட்டமுண்டு எந்த ஒரு கலையும் மக்களிடையே பிறந்து அவர்களிடமே வாழ்ந்து போய் சேர்பவைகளாக இருந்திருக்க , பின்னாளில் அவை மெல்ல ஒரு செவ்வியல் தன்மை அடையும் போது குறிப்பிட்ட வட்டத்திற்கு உரியதாக மாறி விடுகின்றது. அந்த சிக்கல் இலக்கியத்திற்கும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது அந்த நவீன இலக்கியம் என்ற சொல் இந்த புத்தகங்களை வாசிப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்றும் , சாதாரண மக்கள் இந்த புத்தகங்களை வாசிக்க முடியாது அப்படீங்கிற சூழல் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் நான் எப்படி பார்க்கின்றேன் என்றால். நாட்டியக் கலை ஆர்வம் உள்ளவர்கள் தான் நாட்டியத்தை ரசிக்க முடியும் அப்போ குறிப்பிட்ட கலைக்கான வட்டம் இருந்து கொண்டு தானிருக்கு . இலக்கியம் கவிதை அதற்கான ஆர்வம் உள்ளவர்களிடம் போய்கொண்டுதானிருக்கின்றது ஆனால் சமீப காலமாக தீவிர இலக்கியம் நவீன இலக்கியம் எனும் சிற்றிதழ்கள் வடிவமைக்கின்ற போக்கு ஒரு நடுத்தர வர்க்கம் கூட புரிந்துகொள்ள முடியாத தளத்திலும் , உத்திகளின் பின்னாலும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. கனகசபாபதி அவர்கள் அடிக்கடி சொல்லுவார் உத்திகளின் பின்னால் பயணிக்கின்ற படைப்பு நிகழ் நிமிசத்தின் கொதி நிலையை தவற விட்டு விடுகின்றது நிகழ் நிமிசத்தின் கொதி நிலையை கணக்கிலெடுக்கும் , படைப்பு, எவ்வளவு தீவிர இலக்கியம் என்று சொன்னாலும் மக்களிடம் போய்ச் சேரும் . நாங்கள் உத்திகளின் பின்னால் போவதால்தான் மக்களிடையே போய் சேராமல் இருக்கின்றது.

சி. க அவர்கள் மதுரை பல்கலைக்கழக பேராசிரியராக இருந்திருக்கின்றார். எழுத்து பத்திரிக்கையில் அவருடைய பங்களிப்பு மிக உயர்வாக இருந்திருக்கின்றது புதுக் கவிதையை ஒரு பல்கலைக்கழக அளவில் கல்வித்துறைக்குள் இலக்கிய வாதிகளை கொண்டு சேர்த்த பெருமை சி. க வை சாரும் என்பது ஒரு முக்கியமான விடயம் உங்களுக்கு சி. க மீது ஈபாடு ஏற்பட்டது.



நான் இணையங்கள் மூலம் தான் தமிழ் நாட்டு இலக்கிய உலகுக்கு அறிமுகமாகின்றேன் எனக்கு வாசிப்பும் குறைவுதான் நான் மீண்டும் சிவகாசியிலிருந்து எனது இலக்கிய வாசிப்பை தொடக்கலாம் என்று புறப்பட்ட் அபோது லஷ்மிஅம்மாள் நட்புகிடைத்தது. லட்சுமி அம்மாள் கணவர் சி. க . நான் சி. க வை நேரில் அறிந்திருக்கவில்லை லட்சுமி அம்மாவின் நட்பு கிடைத்ததில் எனக்கு நிறைய புத்தகங்கள் கிடைத்தன. அந்த புத்தகங்களிலும், சி. கவினது கையெழுத்துப் பிரதிகளாகவும் நிறைய கட்டுரைகள் இருந்தது. நான் அந்த கட்டுரையை வாசிக்கையில் எனக்கு ரொம்பப்பிடித்திருந்தது அவர் 70 எழுதினார். இன்றைக்கு சர்ச்சைகள் செய்யக் கூடிய இலக்கிய விசயங்களுக்கு பதில் கிடைக்கின்ற மாதிரி நான் நம்புகின்றேன். இதைக்கட்டயாம் பிரசுரமாக்க வேண்டும் என்று தி. க.சி முன் முயற்சி எடுத்தார்.
இரண்டு தொகுப்புகள் வந்திருக்கின்றன. இன்னொரு தொகுப்பு டிசம்பரில் வர இருக்கின்றது.

பம் தொலைக் காட்சியில் வெளி வந்த நேர்காணல்
posted by mathibama.blogspot.com @ 9/13/2006 01:42:00 pm  
1 Comments:
  • At Friday, September 15, 2006 4:50:00 pm, Blogger தேவமகள் said…

    ஆனால் சமீப காலமாக தீவிர இலக்கியம் நவீன இலக்கியம் எனும் சிற்றிதழ்கள் வடிவமைக்கின்ற போக்கு ஒரு நடுத்தர வர்க்கம் கூட புரிந்துகொள்ள முடியாத தளத்திலும் , உத்திகளின் பின்னாலும் பயணித்துக் கொண்டிருக்கின்றது
    நிறைய உண்மைகளை எதார்த்தமாக பேசியிருக்கிறீர்கள் தோழி!
    நல்ல செவ்வி!
    வாழ்த்துக்கள்!!!

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates