சூரியாள்

Sunday, May 04, 2008
விதைக்குள் உறக்கம்
உன் கர்ப்பப் பை
கத கதப்புகள் தேவையாயிருக்கின்றன

பருவம் முளைத்த
காலம் தொட்டு
தொடுவதைத் தவிர்த்தாள் அம்மா

மூணாம் பேருக்குத் தெரியாமல்
பெரியவளானதை
முற்போக்காய் கடந்தவள்
எப்பவும் நெருப்பு
அடிவயிற்றில் சுமக்க
வெம்மை தாங்காது
எனைத் தூர வைத்து விட்டாள்

திருமண இரைச்சலின் பின்
எனக்கென்று உரிமைகள்
தொலைத்தும்
அம்மாவினதா மருமகளினதா
உடைமைப் போராட்டத்தில்
என்னை அந்நியமாக்கி
துப்பிய அம்மா வீடு

கணவன் பிள்ளைகள் சுற்றம்
நட்புகள் எல்லாம்
என் மடி நிழலில்
உறங்கிப் போக

உறக்கம் மறந்த
விழிப்பு நிலையில்
எப்பவும் இரவுகள்
தொடை துளைத்த வண்டோடு


இறங்கப் போகின்ற
சந்திப்புதனை
தவற விட்டு விடாதிருக்க
விழிகள் தண்டவாளம் மீதிறங்கி
தற்கொலை செய்து
கொண்டன தூக்கத்தை

பாதரசப் பிரதிபலிப்பு அற்று
பிறந்த நாளை நினைவு கொண்டு
வாழ்த்தும்
தாயின் மடி உறக்கம்
தூங்காமலேயே
பெரும் கனவாகிப் போனது

குளிரும் இரவுகளில்
தலையணை நனைக்கும்
கண்ணீர்த் துளிகள்
கனவை அழித்த படியே
ஏக்கத்தை முளைக்க வைக்கின்றது

நூற்றாண்டுகளாய் விழித்திருக்கும்
விருட்சங்களை பார்க்கையிலெல்லாம்
கேட்டு வைக்கின்றேன்
மீண்டும்
விதைக்குள் உறங்க
ஆசை துளிர்த்ததுண்டா வென

Labels:

posted by mathibama.blogspot.com @ 5/04/2008 06:20:00 pm  
1 Comments:
  • At Sunday, May 04, 2008 8:21:00 pm, Blogger வல்வை சகாறா said…

    கருப்பையின் கதகதப்பில் மீண்டும் குடிபுகுந்து இந்தப் பிரபஞ்ச வெளிகளைத் தரிசிக்காமல் இதமான சுகத்திற்குள் உறங்கச் சொல்லி மனம் அவாவுறுகிறது. இன்றைய சிந்தனையை நேற்று அம்மாவும் கடந்துள்ளாளே, அவளுக்கு வெளியே எடுத்துச் சொல்ல மொழி இல்லாது போய்விட்டது...

    சூரியாள் உங்கள் படைப்பு யதார்த்தத்தையும் உள்ளத்து உணர்வுகளையும் அழகாக சொல்கிறது.

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates