சூரியாள்

Tuesday, August 12, 2008
காற்றழிக்கும் சவுக்கடிகள்



அன்புக்கென்று தந்த பரிசுகள்
முதுகில் கீறள் தீற்றிய
சவுக்கடிகளாய்

உன் உணர்தலாய் சொல்லப் பட்ட
உண்மைகள்

என் நெல்லிக் கனியின்
சதையற்ற கொட்டையாயிருக்க
அதை விழுங்கிக் கொள்கிறது
புதை குழியாய் என் மனம்

அதன் இளக்கத்தில்
வேர் கொள்ள மறுக்கும் விதைகளுக்காக
ஈரங்களைத் தொலைக்கின்றேன்
வெடிக்கின்ற விதையினின்றும்
துளிர்க்கின்ற அரும்புகள்லிருந்தும்
மரமெங்கும் தொங்குகின்றன
சொட்டும் ஈரச் சதையோடு
நெல்லிக் கனிகள்
யாரும் இனி ஒளித்து விட
முடியாத படிக்கு

உடைந்த நீர்க்குமுழியிலிருந்து
விடைபெறுகிறது காற்று

ஆகஸ்ட் தீராநதியில் வெளி வந்த கவிதை

Labels:

posted by mathibama.blogspot.com @ 8/12/2008 07:47:00 pm   0 comments
Tuesday, August 05, 2008
நேச நிஜங்கள்
உனக்கு வேண்டியதைக் கேள்
ஆசையைச் சொல் என்றாய்
வெளிப்படையான பேச்சு
உனக்கும் எனக்கும் தரும் நெருக்கமென்றாய்

காதுக்கிடை கிசுகிசுத்த என் பேச்சுக் கிடை
அணைத்தாய் , முத்தம் தந்தாய்
வாங்கி வராது போயிருந்த பூவுக்காய்
மூவாயிரத்து எழுபத்தொன்றாவது முறையாக
நாளை நினைந்து
வாங்கி வருவதாக வாக்குறுதியுடனும்
தூங்கிப் போயிருந்தாய்

இன்னமும் நிறைவிலாது
நான் சொல்லாமல் விட்டது எது
தேடல் நான் துவங்க

நடுநிசி ஆந்தை அலறலாய்
எனக்குள் அலறியது
நீ நீயாய் இல்லாது
என் சொற்களின் செயல்பாடாய்
போயிருந்த நிஜம்

உன் ஆசைகளோ
நான் அட்சய பாத்திரமாய் இருக்க

ஒட்டிக் கொண்டிருந்த
ஒரே ஒருபருக்கையளவாவது
உன் நேசம்இருக்கின்ற பட்சத்தில்
பாத்திரம் மாறும் அட்சயமாய்

வெளிப்படையான பேச்சும் விளங்காத நீ
எப்போதுணர்வாய்
கேட்டது ஸ்பரிசமல்ல
நேச நிஜமென்று

Labels:

posted by mathibama.blogspot.com @ 8/05/2008 08:09:00 pm   1 comments
ஐம்பூதங்களாகி
நிலமெனத் தாங்கினோம்
வேர் ஊன்றிய போதும்
இருப்பதை மறந்து
தோண்டிய பள்ளத்திலும்
ஏறி நின்ற மேட்டிலும்
மிதித்தே போனாய்

காற்றென
உடல் வழி ஓடி
உயிர் வழியாகியிருக்க
கூடவே யிருந்ததை உணராது
இட்டு நிரப்பத் தேடித் திரிந்து
விலகியே வாழ்ந்தாய்

துளியாய் வீழ்ந்து
மண் உறிஞ்சித் தீர்த்த பின்னும்
ஊற்றாய் பெருகி
நதியாய் ஓடி
அருவியாய் வீழ
கடலோடு கலப்பதற்கான
என் பயணமென
பாதை மாற்றிச் சொல்லித் தீர்த்தாய்
கடலும் நானே என்றறியாது.

இறுகிய கல்லும்
பச்சை மூங்கிலும் உரசப்
பற்றும் நெருப்பாய் நானிருக்க
வேகும் வரை எரிய விட்டு
முடிந்த பின் தீர்த்துப் போனாய்

தீராது எரிந்து மதுரை நான்
உண்ட பின்னும்
பேசித் தீர்த்து சாம்பராக்க
சாணக்கிய குடுமி முடிகின்றாய்

விரிகின்ற வானாய்
தொட்டு விடவும்
கற்பனை படியேற முடியாத
கம்பளமாயும்
மாறிப் போனேன்

தோன்றி மறையும் என்னில் சில
சந்திரன்களும் சூரியன்களும்
விண்மீன்களும்

வந்து போவதாய் காட்சி தரும்
இருளும் ஒளியும்
நாலும் அடக்கிய ஐந்தாய்
நாலிலும் அடங்காத ஒன்றாய்
தோற்றப் பாடுகள் காட்டி
தொடங்கித் தோன்றுவேன் நான்

Labels:

posted by mathibama.blogspot.com @ 8/05/2008 02:27:00 pm   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates